தொடர்ந்து 3-ஆவது நாளாக எழுச்சி: 230 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
தொடர்ந்து 3-ஆவது நாளாக எழுச்சி: 230 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்
Updated on
1 min read

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னேற்றம் கண்டுள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு ஆசிய சந்தைகளில் வர்த்தகம் நேர்மறையாக இருந்ததன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக, வங்கி, நிதிநிறுவனங்கள், ஆட்டோ, மெட்டல், ஃபார்மா, ஹெல்த்கேர், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அதே சமயம், ஐடி பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன. இருப்பினும், சந்தை 3-வது நாளாக தொடர்ந்து முன்னேற்றம் கண்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.4.82 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.358.92 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த

வெள்ளிக்கிழமை ரூ. 2,828.94 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனர். அதே சமயம், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,166.72 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளன.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 9.18 புள்ளிகள் குறைந்து 71,106.96-இல் தொடங்கிய சென்செக்ஸ், 71,012.08 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 71,471.29 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 229.84 புள்ளிகள் (0.32சதவீதம்) உயர்ந்து 71,336.80-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 4,030 பங்குகளில் 2,331 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,557 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 142 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

24 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் என்டிபிசி, எம் அண்ட் எம், விப்ரோ, கோட்டக் வங்கி, டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட் ஆகியவை 1.25 சதவீதம் முதல் 2.50 சதவீதம் வரை உயர்ந்தன. இவை உள்பட மொத்தம் 24 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக் ஆகிய 6 பங்குகள் வீழ்ச்சிப்பட்டியலில் வந்தன.

நிஃப்டி 92 புள்ளிகள் முன்னேற்றம்:

தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 15.80 புள்ளிகள் கூடுதலுடன் 21,365.20-இல் தொடங்கி 21,329.45 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 21,477.15 வரை மேலே சென்ற சென்ற நிஃப்டி, இறுதியில் 91.95 புள்ளிகள் (0.43 சதவீதம்) உயர்ந்து 21,441.35-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,280 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 889 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 41 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com