2022ஆம் ஆண்டில் மெர்ஸிடஸ் பென்ஸ் கார்கள் இந்தியாவில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 15, 822 புதிய கார்கள் விற்பனையாகியுள்ளன. இதனால் அந்நிறுவனத்தின் விற்பனை விகிதம் 41% அதிகரித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்ததால், நாட்டில் சொகுசுக் கார்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் மெர்ஸிடஸ் பென்ஸ் முதன்மை இடத்தில் நீடித்து வருகிறது. தொடர்ந்து 8வது ஆண்டாக மெர்ஸிடஸ், இந்த சாதனையை வசப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து 11,981 கார்களை விற்பனை செய்ததன் மூலம் பிஎம்டபிள்யூ நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதேபோன்று 7,282 இருசக்கர வாகனத்தை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. பிஎம்டபிள்யூ வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான கார்கள் விற்பனை செய்யப்பட்டது 2021ஆம் ஆண்டில்தான்.
அதற்கு அடுத்தபடியாக ஆடி சொகுசுக் கார் நிறுவனம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய மெர்ஸிடஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சந்தோஷ் ஐயர், ''கடந்த ஆண்டு அதிக அளவு வளர்ச்சி கிடைத்தது விலையுயர்ந்த சொகுசுக் கார் மாடல்கள் விற்பனையால்தான். அந்த பிரிவில் மட்டும் 69 சதவிகிதம் கார்கள் விற்பனையாகின. 2022-ல் மட்டும் 3,500 அதிக விலையுடைய கார்களை விற்பனை செய்தோம். அந்த பிரிவில் அனைத்து கார்களும் ஒரு கோடிக்கும் அதிகமான தொகையுடையதாக இருக்கும்'' எனக் குறிப்பிட்டார்.