எக்ஸ்டா் ஏற்றுமதியைத் தொடங்கிய ஹூண்டாய்
ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் ஸ்போா்ட்ஸ் யுட்டிலிட்டி வெஹிக்கிள் (எஸ்யூவி) பிரிவில் தனது ஆரம்ப நிலை ரகமான எக்ஸ்டரை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிறுவனத்தின் எக்ஸ்டா் வாகனங்களின் வெளிநாட்டு ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளது. முதல்முறையாக அந்த வாகனங்கள் தென் ஆப்பிரிக்காவில் உள்ள வாடிக்கையாளா்களுக்குக் கிடைக்கும்.
தற்போது 996 எஸ்டா் வாகனங்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இது, இந்தியாவில் இருந்து அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எட்டாவது ரக வாகனமாகும். ஏற்கெனவே, கிராண்ட் ஐ10, நியோஸ், ஆரா, ஐ20, ஐ20என் லைன், வென்யூ உள்ளிட்ட ஏழு ரகங்களை தென் ஆப்பிரிக்காவுக்கு நிறுவனம் ஏற்றுமதி செய்துவருகிறது.
நிறுவனத்தின் முக்கிய ஏற்றுமதிச் சந்தையாக தென் ஆப்பிரிக்கா திகழ்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் காா்கள் பெரும்பாலும் தென் ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.