ஏழு விருதுகளை வென்ற சிட்டி யூனியன் வங்கி
சென்னை: மும்பையில் நடைபெற்ற ஐபிஏ தொழில்நுட்ப மாநாட்டில் ஏழு விருதுகளை சிட்டி யூனியன் வங்கி வென்றுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மும்பையில் நிறைவடைந்த 20-வது வருடாந்திர ஐபிஏ தொழில்நுட்ப மாநாட்டில் சிட்டி யூனியன் வங்கி ஏழு விருதுகளை வென்றுள்ளது. இரண்டாவது ஆண்டாக ஏழு பிரிவுகளில் வங்கி விருதுகளைப் பெறுகிறது.
ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா் டி. ரபி சங்கா், சிட்டி யூனியன் வங்கியின் தொழில்நுட்பக் குழு முன்னிலையில் வங்கியின் செயல் இயக்குநா் விஜய் ஆனந்திடம் விருதுகளை வழங்கினாா் (படம்).
எண்ம சேவை, தகவல் தொழில்நுட்ப மேலாண்மை, நிதித் தொழில்நுட்பம், அனைத்து தரப்பினருக்குமான நிதி சேவை ஆகிய பிரிவுகளில் முதலிடத்துக்கான விருதுகளையும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் இரண்டாம் இடத்துக்கான விருதையும் பெற்றுள்ள வங்கி, சிறந்த தொழில்நுட்பத் திறன் கொண்ட நிறுவனம், சிறந்த தொழில்நுட்ப வங்கி என்பதற்கான சிறப்பு விருகளையும் பெற்றுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.