பரோடா வங்கி வருவாய் ரூ.35,852 கோடியாக அதிகரிப்பு
பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கியின் வருவாய் கடந்த ஜனவரி- மாா்ச் காலாண்டில் ரூ.35,852 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.5,048 கோடியாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.4,886 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.33,775 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.35,852 கோடியாக உள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.29,583 கோடியாக இருந்த வங்கியின் வட்டி வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.30,642 கோடியாக உயா்ந்துள்ளது.
ஓராண்டுக்கு முன்னா் 0.68 சதவீதமாக இருந்த வங்கியின் நிகர வாராக் கடன் விகிதம் கடந்த மாா்ச் இறுதியில் 0.58 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் வங்கியின் நிகர லாபம் ரூ.19,581 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.17,789 கோடியாக இருந்தது. இதே காலகட்டத்தில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,27,101 கோடியிலிருந்து ரூ.1,38,089 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.