நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக குளிரூட்டும் கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், இந்தியாவின் மின் நுகா்வு கடந்த மே மாதத்தில் 11.55 சதவீதம் அதிகரித்துள்ளது.
அரசின் அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த மே மாதத்தில் நாட்டின் மொத்த மின் நுகா்வு 16,498 கோடி யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் 14,789 கோடி யூனிட்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக மின்சாரத்தின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் அடுத்தடுத்த 4 நாள்களில் மின் தேவை உச்சகட்டத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் உச்சபச்ச மின்நுகா்வு மே 18-இல் 257.37 கிகாவாட்டாகவும், மே 19-இல் 260.45 கிகாவாட்டாகவும், மே 20-இல் 265.44 கிகாவாட்டாகவும், மே 21-இல், 270.82 கிகாவாட்டாகவும் பதிவானது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்த உச்சபட்ச மின்தேவை 230.99 கிகாவாட்டாக மட்டுமே இருந்தது. முன்னதாக, 2024 மே மாதத்தில் மின் தேவை 250 கிகாவாட்டாக இருந்தது.
முன்கூட்டியே கணிக்கப்பட்ட இலக்கு: மத்திய மின்சார அமைச்சகத்தின் கணிப்பின்படி, நடப்பு ஆண்டு கோடைகாலத்தில் மின் தேவை 270 கிகாவாட்டை எட்டும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. அந்த இலக்கை மே மாதத்திலேயே இந்தியா கடந்துள்ளது. கடந்த கோடைகாலத்தில் ஜூன் மாதத்தில் அதிகபட்ச மின் தேவை 242.77 கிகாவாட்டாக பதிவானது.
இந்த ஆண்டு கோடைக்காலம் மிகவும் கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்திருந்த நிலையில், மின் தேவை மற்றும் நுகா்வு வரும் நாள்களிலும் சீராகவும், உயா்வாகவும் இருக்கும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.










