/

சரிந்து, மீண்டு பிறகு சரிந்த பங்குச் சந்தை: ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு!!

சென்செக்ஸ் 160.73 புள்ளிகள் சரிந்து 75,237.99 புள்ளிகளாகவும், நிஃப்டி 46.10 புள்ளிகள் சரிந்து 23,643.50 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

பங்குச் சந்தை - கோப்புப் படம்

Updated On :54 நிமிடங்கள் முன்பு

மும்பை: தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில், இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்ததால், வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச் சந்தை சரிந்தன.

உலோகம், எண்ணெய் & எரிவாயு, பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகளில் ஏற்பட்ட விற்பனையானது குறியீடுகளை தொட்ரந்து கீழ்நோக்கி அழைத்து சென்றன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 471.64 புள்ளிகள் உயர்ந்து அதன் உச்சபட்சமாக 75,870.36 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில், நிஃப்டி 149.70 புள்ளிகள் உயர்ந்து 23,839.30 புள்ளிகளை எட்டியது.

வர்த்தக முடிவில், சந்தை போக்கை வைத்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால் சென்செக்ஸ் 160.73 புள்ளிகள் சரிந்து 75,237.99 புள்ளிகளாகவும், நிஃப்டி 46.10 புள்ளிகள் சரிந்து 23,643.50 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இந்த வாரத்தில் சுமார் 2.2 சதவீதம் மற்றும் 2.7 சதவீதம் சரிந்து, இரண்டு வார தொடர் ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தன.

சென்செக்ஸில் டாடா ஸ்டீல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எடர்னல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா & மஹிந்திரா, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், லார்சன் & டூப்ரோ, ட்ரென்ட், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, பவர்கிரிட், அதானி போர்ட்ஸ், மாருதி சுசுகி இந்தியா, பார்தி ஏர்டெல், கோடக் மஹிந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் சன் பார்மாசூட்டிகல்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

13 முக்கியத் துறைகளில் இன்று சரிந்த நிலையில், ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகள் முறையே 4.6 சதவீதம் மற்றும் 2.2 சதவீதம் சரிந்தன.

தகவல் தொழில்நுட்பக் குறியீடுகள் இன்று 1.3% உயர்ந்தபோதிலும், இந்த வாரத்தில் அவை சந்தித்த 5.7 சதவீத சரிவை ஈடுசெய்ய முடியவில்லை. எனினும், 4 பில்லியன் டாலர் முதலீட்டு ஆதரவுடன் ஓப்பன்-ஏஐ நிறுவனம் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தைத் தொடங்கிய பிறகும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வருவாய் குறித்த அச்சங்கள் முதலீட்டாளர்களிடம் தொடர்ந்து இருந்தன.

ஊபர் நிறுவனம் தனது முதல் இந்தியத் தரவு மையத்தை அதானி எண்டர்பிரைசஸ் குழுமத்துடன் இணைந்து அமைக்கும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த வாரம் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 8.4 சதவீதம் உயர்ந்தன. நிறுவனர் கௌதம் அதானி மீதான குற்றவியல் மோசடி குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை கைவிடவிருப்பதாக வியாழக்கிழமை வெளியான செய்திகள், பங்குச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கான உரிமத்தொகையை மத்திய அரசு குறைத்ததைத் தொடர்ந்து, ஓ.என்.ஜி.சி. பங்குகள் 7.2 சதவீதம் உயர்ந்தன.

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரித்த போதிலும், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் பங்குகள் வெகுவான அழுத்தத்தில் இருந்தன. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வால், சந்தை எதிர்பார்ப்புகளை விட விலை உயர்வு குறைவாகக் கருதப்பட்டதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். இதற்கிடையில், பிபிசிஎல், ஹெச்பிசிஎல் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட பங்குகள் 1.8 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை சரிந்தன.

காலாண்டு லாபத்தில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து டைட்டன் 7.5 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பைத் தொடர்ந்து நகைப் பங்குகளும் தொடரந்து சரிந்தன.

தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 187.46 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அதே வேளையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.684.33 கோடி மதிப்பிலான பங்குகள் வாங்கியுள்ளனர்.

தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 187.46 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அதே வேளையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.684.33 கோடி மதிப்பிலான பங்குகள் வாங்கியுள்ளனர்.

உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் அரசியல் பதற்றங்கள் குறித்த அச்சத்தால், ஆசிய சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமானது. தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கெய் 225 மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை சரிந்தன.

வால் ஸ்ட்ரீட் ஃபியூச்சர்ஸும் சரிந்த நிலையில், டவ் ஃபியூச்சர்ஸ் 0.7 சதவீதம் சரிந்தன. அதே நேரத்தில் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த நாஸ்டாக் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 3 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து 109.09 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Sensex and Nifty surrendered early gains to close lower on Friday due to selling in metal, oil & gas and PSU bank shares and caution among investors amid surging crude oil prices.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.