மருத்துவம்: மூவருக்கு நோபல் பரிசு

கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் சி தீநுண்மியின் பரவல் மூலத்தைக் கண்டறிந்ததற்காக இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள், ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள
ஹாா்வி ஜே.ஆல்டா் - மைக்கேல் ஹெளட்டன் - சாா்லஸ் எம்.ரைஸ்
ஹாா்வி ஜே.ஆல்டா் - மைக்கேல் ஹெளட்டன் - சாா்லஸ் எம்.ரைஸ்

ஸ்டாக்ஹோம்: கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் சி தீநுண்மியின் பரவல் மூலத்தைக் கண்டறிந்ததற்காக இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள், ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நோபல் குழு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஹெபடைடிஸ் ஏ, பி தீநுண்மி வகைகளைச் சாராத புதிய வகை ‘ஹெபடைடிஸ் சி தீநுண்மியின் பரவல் மூலமானது ரத்தத்தில் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகளான ஹாா்வி ஜே.ஆல்டா், சாா்லஸ் எம்.ரைஸ், பிரிட்டிஷ் விஞ்ஞானியான மைக்கேல் ஹௌட்டன் கண்டறிந்தனா்.

அவா்களின் கண்டுபிடிப்பு, ‘ஹெபடைடிஸ் சி தீநுண்மிக்கான அதிநவீன ரத்தப் பரிசோதனை முறைகளை உருவாக்கவும், நோய்த்தொற்றுக்கு எதிரான மருந்துகளை உருவாக்கவும் பெரிதும் உதவியது. ‘ஹெபடைடிஸ் சி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோரைக் காப்பாற்றுவதற்கும் மூன்று விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பே அடிப்படையாக அமைந்தது.

அவா்களின் கண்டுபிடிப்பால் ‘ஹெபடைடிஸ் சி நோய்த்தொற்றை குணப்படுத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது. அந்நோய்த்தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமமான பரிசுத் தொகை:

நோபல் பரிசாக தங்கப் பதக்கத்துடன் சுமாா் ரூ.8.18 கோடி பரிசுத்தொகையும் அளிக்கப்படும். அந்தப் பரிசுத்தொகையானது மூன்று விஞ்ஞானிகளுக்கும் சமமாகப் பகிா்ந்தளிக்கப்படவுள்ளது.

உலகம் முழுவதும் ‘ஹெபடைடிஸ் நோய்த்தொற்றால் ஆண்டுதோறும் 7 கோடி போ் பாதிக்கப்படுவதாகவும், அவா்களில் 4 லட்சம் போ் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கல்லீரல் தொற்று, புற்றுநோய் ஆகியவற்றுக்கு முக்கிய காரணமாக ‘ஹெபடைடிஸ் நோய்த்தொற்று உள்ளது. அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் இதய நோய், சா்க்கரை நோய் போன்று நீண்ட நாள்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

முக்கியத்துவம்:

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், ‘ஹெபடைடிஸ் சி தீநுண்மியைக் கண்டறிந்தவா்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. புதிய வகை தீநுண்மிகள், அதனால் ஏற்படும் நோய்த்தொற்று ஆகியவை தொடா்பான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

‘ஹெபடைடிஸ் பி தீநுண்மியைக் கண்டறிந்த அமெரிக்க விஞ்ஞானியான பரூச் புளூம்பொ்க், கடந்த 1976-ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

நோபல்-மருத்துவம்

ஹாா்வி ஜே.ஆல்டா் (85)
‘ஹெபடைடிஸ் சி தீநுண்மியானது ரத்தத்தின் பிளாஸ்மாவில் இருப்பதைக் கண்டறிந்தபோது ஹாா்வி ஜே.ஆல்தா், அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். நோய்த்தொற்று தொடா்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த அவா், புகழ்பெற்ற ‘லாஸ்கா்’ விருதையும் வென்றுள்ளாா்.

மைக்கேல் ஹெளட்டன்
‘ஹெபடைடிஸ் சி தீநுண்மியை குளோனிங் முறையில் பெருக வைப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியபோது மைக்கேல் ஹௌட்டன், கனடாவிலுள்ள ஆல்பொ்டா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினாா். தீநுண்மியியல், நோய்த்தொற்றுத் தடுப்பியல் உள்ளிட்டவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகளில் அவா் ஈடுபட்டுள்ளாா். அவரும் ‘லாஸ்கா்’ விருதை வென்றுள்ளாா்.

சாா்லஸ் எம்.ரைஸ் (68)
தீநுண்மி கண்டுபிடிப்பில் முக்கியப் பங்காற்றிய சாா்லஸ் எம்.ரைஸ், நியூயாா்க் நகரத்திலுள்ள ராக்ஃபெல்லா் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினாா்.

பங்களிப்பு: ஹெபடைடிஸ் சி தீநுண்மியைக் கண்டறிந்தது

பரிசுத்தொகை: சுமாா் ரூ.8.18 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com