1983-ல், ஜெனிவாவில் சட்டத்துக்குக் கொஞ்சம் புறம்பான கலைப் பொருட்கள் பண்டைய தோல் சுருள்கள் ஆகியவற்றுக்கான நிழலான சந்தையில், 'யூதாஸ் அருளிய நற்செய்தி’ (Gospel of Judas) இருப்பது கசிய ஆரம்பித்தது. பல கை மாற்றங்கள், திருட்டுகள் எனத் தொடங்கிய அந்த ‘நற்செய்தி’ குறித்த தேடல் வேட்டை, இறுதியில் அது உருப்படியான ஆராய்ச்சியாளர்களின் கரங்களை அடைந்தது. அரிஸோனா பல்கலையும், நேஷனல் ஜியாக்ரஃபிக் அமைப்பினரும் இணைந்து ஆராய்ச்சி செய்து, 'யூதாஸின் நற்செய்தி’ எழுதப்பட்ட பப்பரைஸ் துண்டுகள், கி.பி. 3-ம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். ஆனால், யூதாஸின் நற்செய்தி என்கிற ஒரு நூல் அதற்கு முன்பே இருந்ததைக் கண்டனம் செய்வதன் மூலம் உறுதிப்படுத்துகிறார் ஐரேனியஸ் என்கிற பிஷப். கி.பி. 180-ம் ஆண்டு, அந்தக் கண்டனங்களை அவர் எழுதியிருக்கிறார். மைய கிறிஸ்தவ இறையியல் 'க்னாஸ்டிக் தப்பிதம்’ (Gnostic heresy: Gnosis என்றால் ஞானம் என்று பொருள்) என அடையாளப்படுத்தும் வகையறாவைச் சார்ந்தது, 'யூதாஸின் நற்செய்தி’.