மேற்கத்திய நாடுகளில் Transpersonal psychology எனக் கூறப்படும் உள்ளவியல் புலத்தின் பிதாமகரான ஸ்தனிஸ்தலவ் க்ரோப் (Stanislav Grof) இதை மேலும் விவரிக்கிறார். ஒரு மனிதன், அவனில் குண்டலினி விழித்தெழும்போது பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கும் புத்தாக்க உத்வேகங்களுக்கும் ஆளாகிறான். அதீதமாகும் பாலியல் இச்சைகளில் இருந்து மனத்தளர்ச்சி அகம் உடைதல் என பல்வேறு நிலைகளுக்குள் அவன் செலுத்தப்படுகிறான். இந்தக் காலகட்டத்தில் அவனை சரியாக வழி நடத்த ஒரு ஆன்மிக உள்ளவியல் வழிகாட்டி தேவை. இதை க்ரோப் கூறுகிறார். அப்படிக் கிடைக்கும் வழிகாட்டியின் மூலம் குண்டலினி கிளர்ச்சிக்கு ஆளாகும் நபர், தன்னை முழுமையாக்கும் ஒரு நகர்வை நோக்கிப் பயணிக்கிறார். அத்தகைய நகர்வை holotropism என்கிறார் க்ரோப். அடிப்படைவாத நம்பிக்கைகளில் சிக்காமல் தன்னை விரிவாக்கும் ஒரு பெரும் சாத்தியத்தில் இருக்கும் நபர்கள், இந்தக் குண்டலினி எழுச்சியின் தொடக்கக்கட்ட குழப்பத்தில் ஆழ்ந்திருப்பவர்கள். கோபிகிருஷ்ணா, உள்ளவியலுக்கு அளித்த மிகப் பெரும் கொடை, இந்தப் பார்வை என்று சொல்லலாம்.