…ஆனால் உண்மையில் (வேத தெய்வங்கள்) முக்கியத்துவம் இழக்கவில்லை. வேதங்களில் வெளிப்பட்ட அக உலகை மற்றொரு வடிவில் ஒருமைப்படுத்தி வெளிக்கொணர்வதே நிகழ்ந்தது. …மானுட அகம், அதன் தொல் குழந்தைத்தன்மையைத் தக்கவைத்திருந்தவரை, வைதீக அணுகுமுறை, உயிருள்ள ஜீவ சத்தியமாகப் பிரபஞ்சத்தை உணரும் தன்மை, சாத்தியமாக இருந்தது. ஆனால், மானுட அகம் விரைவில் மற்றொரு பரிமாணம் தன்னில் விழிக்கக் கண்டது. உள்ளுணர்வு செயல்பாட்டை, சிந்தனைச் செயல்பாடு பின்னுக்குத் தள்ளியது. அப்போது, வைதீக அணுகுமுறை தன் மையத்தன்மையை இழக்க வேண்டியதாயிற்று. …உபநிடதத்தின் ஆத்மவாதம், ஒரு திரைக்குப் பின்னே தம்மை மறைத்துக்கொண்ட தெய்வங்களுடனான அன்யோன்யத்தை மீட்டெடுக்கும் ஒரு இயக்கம். …பின்னர் யோகம் வந்தது, கடுமையான சூழலில் இருந்து அகத்தின் ஆழங்களுக்குள் சென்று மறைந்துவிட்ட தெய்வங்களை அங்கு சென்று காணும் இயக்கமாக யோகம் இருந்தது. மகாபாரதத்தில், இந்த விசைகளிடையே நாம் பெரும் சமத்தன்மையைக் காண்கிறோம். இங்கு வேதத்தில் இருப்பது போலவே, தெய்வங்களிடம் அன்யோன்யம் இருக்கிறது. தெய்வங்கள் அகத்துக்குள் செல்லாமலேயே, மிக உயர்ந்த ஆத்மவாதத்தையும் இது முன்வைக்கிறது. தெய்வங்கள் முக்கியத்துவம் இழந்துவிடாமல் பிரம்மவாதம் முன்வைக்கப்படுகிறது. ...ஆனால், காலப்போக்கில் மகாபாரதத்தின் இந்த அணுகுமுறையும் வழக்கொழிந்தது. பிரம்மவாதத்தின் இடத்தில் மாயாவாதமும், ஆத்மவாதத்தின் இடத்தில் அனாத்மவாதமும் உருவானது. …இப்புதிய உருவாக்கங்கள், அறிவு சார்ந்த பகுத்தாய்வின் வலிமையாகவும், உள்ளுணர்வும் புத்துருவாக்கத்தில் பலவீனமாகவும் இருந்தன. …வைதீகத் தெய்வங்கள் என்னதான் தம் பீடங்களை இழந்திருந்தாலும், பௌத்தத்தில் அவை பெரும் நற்சக்திகளாக இயங்கின. வேறு சமயப் பண்பாடுகளில் நிகழ்ந்ததுபோல, அவை அகங்கார தெய்வங்களாகவோ, இச்சை வடிவமான தெய்வங்களாகவோ மாறிடவில்லை.[12]