சிலுவைப்பாடுகள் என்பது சிலுவையை ஏசு சுமந்து வந்தபோது அவர் பட்ட கஷ்டங்களைக் காட்டுவது. சிலுவைப்பாடு, நாடகமாகவும் நடத்தப்படும். Passion Play என்று அழைக்கப்படும் சிலுவைப்பாடுகள், ஐரோப்பாவில் காலம் காலமாக யூதர்கள் மீதான வெறுப்பை மீண்டும் மீண்டும் உருவாக்கும் நிகழ்கலையாக நிகழ்த்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் சிலுவைப்பாடு நாடகங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது, பவாரியாவில் ஒபரம்மெர்கவ் (Oberammergau) கிராமத்தில் நடத்தப்படும் சிலுவைப்பாடு நாடகம்தான். 1663-ல் ஏற்பட்ட பிளேக் நோயில் இருந்து இந்தக் கிராமம் அதிசயமாகக் காப்பாற்றப்பட்டதற்கு நன்றிக்கடனாக, 1664–ல் இருந்தே இந்தச் சிலுவைப்பாடு நாடகம் நடத்தப்படுகிறது. இதில் காட்டப்படும் காட்சிகளில், யூத வெறுப்பு மிக அதீதமாக வெளிப்படுகிறது எனும் குற்றச்சாட்டு, நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. இந்நாடகத்தைக் கண்ட அடால்ஃப் ஹிட்லர், இது யூதர்களின் உண்மை சொரூபத்தை தலைமுறைகளுக்குக் காட்டக்கூடிய ஒரு மிக நல்ல கருவி எனக் கருதினார். 2004-ல் வெளிவந்த மெல் கிப்ஸனின் ’Passion of Christ’, யூதர்களை ரத்தவெறி கொண்ட மானுடத்தன்மையற்ற கும்பலாகக் காட்டியது.