உடற்கல்விக்கு பாடத்திட்டம் தேவை
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் உடற்கல்விக்கென தனியாக பாடத்திட்டம் வகுத்து பாடநூல் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது. அனைத்து


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் உடற்கல்விக்கென தனியாக பாடத்திட்டம் வகுத்து பாடநூல் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் நடத்தப்படும் உடற்கல்வி பாடவேளைக்கான வகுப்புகள் அனைத்தும் ஏதோ பெயரளவுக்குத்தான் நடைபெறுகிறது.
அரசு ஒருபுறம் உடற்கல்வியின் மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதாக கூறியபோதிலும் அது விழலுக்கு இரைத்த நீராகத்தான் இருக்கிறது.
உடற்கல்விப் பிரிவுக்காக மாணவர்களிடம் வசூலிக்கப்படும் சிறப்புக் கட்டணத்தையும் கடந்த ஓரிரு ஆண்டுகளாக அரசே வழங்கி வருகிறது. ஆனாலும், உடற்கல்விக்கான உரிய முக்கியத்துவம் பாடத்திட்டத்தைப் பொருத்தமட்டில் அளிக்கப்படுவதில்லை என்பதே உடற்கல்வி ஆசிரியர்களின் கவலை.
அதாவது, 1 முதல் 10-ம் வகுப்பு வரையில் உள்ள தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடநூல்களுக்கான பாடத்திட்டங்கள்
அனைத்தும் தனியாக ஆசிரியர்கள் குழுவால் தயாரிக்கப்படுகின்றன.
இப் பாடநூல்களில் உடற்கல்விக்கான பாடத்திட்டங்கள் ஏதும் சேர்க்கப்படுவதில்லை. அதேவேளை, உடற்கல்விக்கான தேர்வு 6 முதல் 9-ம் வகுப்பு வரை காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வையொட்டி நடத்தப்படுகிறது. இதற்கான பாடத்திட்டங்கள் இல்லாததால் உடற்கல்வி ஆசிரியர்களே ஏதோ பெயருக்கு சில கேள்விகளைத் தயாரிக்கின்றனர். சரியா- தவறா, பொருத்துக, ஓரிரு வார்த்தைகளில் விடையளி போன்ற கேள்விளைத் தயார் செய்து மாணவர்களுக்குத் தேர்வை
நடத்துகின்றனர்.
பிற பாடங்களைப் படித்து தேர்வு எழுதும்போது அதை மனப்பாடம் செய்தாவது மாணவர்கள் தேர்வை எழுதிட ஆர்வம் காட்டும்போக்கு இருக்கிறது. ஆனால், இத்தேர்வைப் பொருத்தமட்டில் முறையான பாடநூலோ, பாடத்திட்டமோ இல்லாததால் மாணவர்கள் இத்தேர்வை எழுதுவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்கின்றனர் உடற்கல்வி ஆசிரியர்கள். இதனால், உடல்நலக் கல்வியைப் பற்றிய அறிவை இளம் பிராயத்திலேயே மாணவர்கள் தெரிந்துகொள்ளாமல் போய்விடும் நிலை உள்ளது. ஆகவே, பள்ளிப் பாடத்திட்டங்களைத் தயார் செய்யும்போது உடற்கல்வியையும் அதில் சேர்ப்பதுடன், உடல்நலத்தைப் பற்றிய பிரத்யேக விஷயங்களுடன் பாடத்தைக் கொண்டு வர வேண்டும் என்கின்றனர்.
குறிப்பாக, 6 முதல் 12-ம் வகுப்பு வரை உடல்நலக் கல்விக்கென தனியாக ஒரு பாடத்தை அறிமுகம் செய்து, குறிப்பிட்ட மதிப்பெண்களையும் வழங்கலாம். இதன்மூலம் மாணவர்களுக்கு உடல்நலத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதுடன், அவர்கள் விளையாட்டிலும் சிறந்து விளங்க வழியேற்படும்.
பள்ளிகளில் உள்ள இரண்டு உடற்கல்வி பாட வேளைகளில் ஒரு பாட வேளையை யோகா கற்றுத் தரவும், மற்றொரு பாடவேளையை விளையாட்டு சம்பந்தமான பயிற்சிகளை கற்றுத்தரவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு அதுபற்றிய விழிப்புணர்வை பாடத்திட்டங்களும், தகுந்த பயிற்சிகளுடனும் கொண்டு செல்லும்போதுதான் அரசின் நோக்கம் முற்றிலும் நிறைவேறும் என்கின்றனர் உடற்கல்வி ஆசிரியர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...