நெல்லுக்கிறைத்த நீர்: கவிஞர்  "இளவல்"  ஹரிஹரன்

Updated on
1 min read

எத்தனையோ நலத்திட்டம் தீட்டு கின்றார்
   ஏழையர்தம் வாழ்வுயரக் காட்டு கின்றார்
அத்தனையும் அன்னவர்க்கே செல்வ தில்லை
   அரசியலார் இடைவழியிற் சுருட்டு கின்றார்
சித்தமெலாம் கொள்ளைகொளும் சிந்தை கொண்டு
   திட்டங்கள் நலவழியிற் செல்லா வண்ணம்
மொத்தமாக மூட்டைகட்டிச் செல்கின் றாரே
   மூடமக்கள் பார்த்துமிதைப் பொறுக்கின் றாரே.
கல்விகற்க ஏழையர்க்கோ அரசுப் பள்ளி
   கட்டடமே யில்லாமல் மரத்தின் கீழே
நல்லதாகச் செயல்படுமாம் நன்றோ சொல்வீர்
   நாட்டினிலே அடிப்படையு ரிமையாய்க் கல்விச்
செல்வமதோ ஆகாமற் போன தன்றோ
   செல்வந்தர்க் கென்றேயச் செல்வம் சேர
எல்லார்க்கும் எல்லாமே என்னுங் கொள்கை
   எங்கேதான் போயிற்றோ என்ன சொல்ல!
சாலைகளே போடாமல் போட்ட தாகச்
   சகட்டுமேனிக் கணக்கெழுதும் சழக்க ருண்டு.
பாலமொன்று கட்டாமல் நீரில் மூழ்கிப்
   பாலந்தான் சரிந்ததெனக் கதைகள் சொல்வார்.
ஊழலெனும் பேயாட்டம் போடும் போதில்
    உத்தமர்கள் வாழ்வதெங்கே இலஞ்ச மென்னும்
சீழ்பிடித்த நாட்டிற்குச் சிகிச்சை செய்ய
    செயல்வீரர் மறந்ததுதான் தெய்வக் குற்றம்.
நெல்லுக்கி றைத்தநீரைப் புட்டிக்  குள்ளே
     நிறைவாக அடைத்துவைத்து விலைசெய் கின்றார்
புல்லுக்கும் போவதில்லை போகும் நீரோ
     புல்லர்தம் சுயநலத்தில் புதைந்து போகும்.
நல்லகுடி நீரென்றும் மறைநீ ரென்றும்
     நாட்டினிலே அரசியலைச் செய்வ தற்கு
வல்லதொரு கொள்கையாகிப் போன தாலே
    வாழ்விழந்து நதிகளெல்லாம் போன தன்றோ!                

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com