78. குருகாம் வயிரமாம் - பாடல் 11

ஐம்புலன்களையும் அடக்கி
78. குருகாம் வயிரமாம் - பாடல் 11
Updated on
1 min read

பாடல்: 11

ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
          ஒள்ளழலை மாட்டி உடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
         இசைத்தானாம் இன்னிசைகள் கேட்டானாகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கி அங்கே
         ஆகாய மந்திரமும் ஆனானாகும்
கறுத்தானாம் காலனைக் காலால் வீழக்
        கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

எண்ணான்=மதியாதவன், அரக்கன் இராவணன்; சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் என்பதைச் சற்றும் நினையாமல் தனது வலிமை மீது செருக்கு கொண்டு, கயிலை மலையினை பேர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட இராவணனின் செய்கை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது.

ஒறுத்தான்=அழித்தான்: ஒன்னார்=பகைவர்கள்; இறுத்தான்=நசுக்கினான்: கறுத்தான்= கோபம் கொண்டான், வெகுண்டவன், ஆகாய மந்திரம்=ஆகாயமாகிய கோயில், வீட்டுலகம்; 

பொழிப்புரை:

பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்கள் கோட்டைகள் மூன்றினையும், தீ மூட்டி அழித்தவன்; தன்னை மதியாமல் கயிலை மலையை பேர்த்தெடுக்கத் துணிந்த இராவணனது தலைகள் பத்தினையும் நசுக்கியவன்; பின்னர் இராவணனது இன்னிசையைக் கேட்டு அவனைக் காப்பாற்ற இசைந்தவன்; ஐம்புலன்களையும் அடக்கிய சிவபெருமான் வீடுபேறாக இருப்பவன், சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க வந்த காலனின் மீது கோபம் கொண்டு உதைத்தவன். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த எம்பெருமான் கண் போன்று அடியார்களுக்கு வழிகாட்டியாக உள்ளான்.

முடிவுரை:
இறைவனின் எளிமையான தன்மையை, அடியார்கள் பால் அவன் கொண்டுள்ள எல்லையில்லாத கருணையை பாடல் தோறும் சொல்லிவந்த அப்பர் பிரானுக்கு பத்து பாடல்கள் போதவில்லை போலும். மேலும் ஒரு பாடல் அளித்தருளி, பதினோரு பாடல்கள் கொண்ட பதிகமாக படைத்துள்ளார். 
 
சர்வ வல்லமை படைத்த இறைவன் என்றும் உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு கருவாக இருந்து செயல்படும் இறைவன் என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடும் அப்பர் பிரான், அதே பாடலில் தனது சொல்லாக இருப்பவன் என்று கூறுகின்றார். அடுத்த பாடலில் தனது உள்ளத்தின் கருத்தாக உள்ளான் என்று கூறும் அப்பர் பிரான், மூன்றாவது பாடலில் தன்னை பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து காப்பாற்றியவன் என்று இறைவனைக் குறிப்பிடுகின்றார். நான்காவது பாடலில் அடியார்களுக்கு எளியவனாக இருக்கும் தன்மையும், மற்றைய பாடல்களில் அவனை அறியும் அன்பர்களின் நெஞ்சத்தில் கண்ணாக இருந்து வழிகாட்டும் தன்மையும், குறிப்பிடப்பட்டுள்ளது. அனாதியாக உள்ள பரம்பொருள் எவ்வாறு அடியார்களுக்கு எளியவனாக உள்ளான் என்று நமக்கு உணர்த்தி, நம்மை சிவநெறியின் பால் செல்லத் தூண்டும் பதிகமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com