பாடல் 5:
வேலைமலி தண் கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நன் மறையவன் தன்
மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர்
ஆல மிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே
விளக்கம்:
சுவேதகேது என்ற சிறுவனின் ஆயுள் எட்டு வருடங்கள் தான் என்று விதிக்கப் பட்டிருந்தது. இறைவனிடம் அளவிலா பக்தி கொண்டு இருந்த அந்த சிறுவனின் உயிரைப் பறிப்பதற்காக வந்த யமனை, தனது பக்தனை அவமரியாதை செய்ததற்காக சிவபிரான் தண்டித்து, சிறுவனுக்கு நீண்ட ஆயுள் கொடுத்தார். சுவேதகேதுவின் பக்தியை மெச்சி அவனுக்கு தனது ஏழு நடனக் கோலங்களின் காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து ஆல மிடற்றான் அடியாரை அணுக நமன் தூதர் அஞ்சுவர் என்று, இந்த பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகின்றார். சுவேதகேது என்று பெயரைக் குறிப்பிடாமல், மறையவன் என்று பொதுவாக சொல்லியிருப்பதால், இந்த குறிப்பு மார்க்கண்டேயரை குறிப்பிடுகின்றது என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். வெண்காட்டான் திருவடிக்கீழ் வழிபட்ட மறையவன் என்று குறிப்பிடுவதால், தலபுராணம் குறிப்பிடும் சுவேதகேதுவை குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. குறிப்பிடப் படுபவர் எவராக இருந்தாலும், சிவனது அடியார்களை அணுகுவதற்கு இயமனின் தூதர்கள் அஞ்சுகின்றனர் என்ற செய்தியில் எவருக்கும் ஐயம் இல்லை. வேலை=கடல்; கானல்=கடற்கரை சோலை; .தண்= குளிர்ந்த; மலி=நிறைந்த; விள்ளுதல்= உடைத்தல்; அடர்த்தல்=கொல்லுதல், உயிரைக் கவர்தல்; வெம் காலன்=கொடிய காலன்; காலன் உயிரினை பறிக்க வரும்போது, பாலன் என்றோ இளையவன் என்றோ நோய்வாய்ப்பட்டவன் என்றோ பாராது இரக்கம் ஏதுமின்றி, தனது கடமையை செய்வதால் கொடிய காலன் என்று சம்பந்தர் அவனை அழைக்கின்றார்.
பெருமானின் அடியார்களை நீலகண்டரின் அடியார்கள் என்று சம்பந்தர் கூறுவதில் ஒரு நயம் இருப்பதை நாம் உணரலாம். பிரமன் திருமால் உட்பட தேவர்கள் அனைவரையும் அச்சுறுத்தி பல திசைகளிலும் நிலை குலைந்து ஓடச் செய்த நஞ்சு, பெருமான் உட்கொண்ட பின்னர் தனது வலிமையை, உட்கொண்டவரின் உயிரினை மாய்க்கும் தன்மையை இழந்தது போன்று, பெருமானின் அடியார்களை நெருங்கும் இயமனின் தூதுவர்கள் தங்களது வலிமை இழந்து விடுவதால் அச்சம் கொள்கின்றனர் என்ற செய்தி மிகவும் அழகாக இங்கே உணர்த்தப் படுகின்றது.
இந்த செய்தியையே ஒரு எச்சரிக்கையாக மாற்றி, அப்பர் பிரான் கண்டு கொள்ளரியானை (5.92) என்று தொடங்கும் பதிகத்தின் மூலம் பெருமானது அடியார்களின் அருகில் நீங்கள் செல்ல வேண்டா என்று இயமனின் தூதுவர்களுக்கு கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில், பெருமானின் அடியார்களை இயமனது தூதர்களுக்கு அடையாளம் காட்டும் பொருட்டு அவர்களது தன்மைகளை அப்பர் பிரான் சுட்டிக் காட்டுகின்றார். அடியார்களின் உருவத்தையும் செய்கைகளையும் இந்த பதிகத்தில் பட்டியல் இட்டு உணர்த்தும் அப்பர் பிரான். சிவபிரானின் பெருமைகளை பாடலாக பாடுவது, அவ்வாறு பாடப்படும் பாடல்களுக்கு ஏற்ப கொடுகொட்டி, கைத்தாளம் முதலிய கருவிகளை இசைப்பது, சிவபிரானின் திருநாமத்தை பிதற்றுவது, சிவபிரானின் திருவடிகளைப் போற்றி வழிபாடு செய்வது, திருநீற்றினை அணிந்து இருப்பது, சிவபெருமானை வழிபடுவதற்காக, தூபம், தீபம், மலர் மாலைகள் ஏந்திச் செல்லுதல், முதலிய தன்மைகளை அடியார்களின் அடையாளங்களாக கூறுகின்றார். அடியார்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது மட்டுமன்றி, அவர்களைப் போற்றியும், பேணியும் பாதுகாப்பது அவர்களின் கடமை என்று இயமனின் தூதர்களுக்கு உணர்த்தும் அப்பர் பிரான், பதிகத்தின் கடைப் பாடலில், அடியார்களுக்கு இன்னல் விளைவித்தால் என்ன நடக்கும் என்பதையும் எச்சரிக்கையாக விடுப்பதையும் நாம் உணரலாம். இந்த எச்சரிக்கையை பொருட் படுத்தாது, இயமனின் தூதர்கள் அவர்களது பாசக் கயிற்றினை சுருக்காக அடியார்களின் திருமேனியின் மீது வீசி அவர்களது உயிரினைக் கவர முயற்சி செய்தால், பெருமானது திருவடிகள் அவர்களை சுட்டுவிடும் என்று கூறுகின்றார். எனவே பெருமானது அடியார்கள் உங்களின் எதிரே வந்தாலும், இயமனின் தூதர்களே நீங்கள் விலகிச் செல்வது உங்களுக்கு நல்லது என்ற அறிவுரை இந்த பாடல் மூலம், அப்பர் பிரானால் அவர்களுக்கு வழங்கப் படுகின்றது.
அரக்கன் ஈரைந்தலையுமோர் தாளினால்
நெருக்கி ஊன்றி இட்டான் தமர் நிற்கிலும்
சுருக்கெனாது அங்குப் பேர்மின்கண் மற்று நீர்
சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே
இயமனையோ அவனது தூதர்களையோ, அடியார்கள் பால் நெருங்க இயலாத வண்ணம் பெருமான் காப்பதால், பெருமானின் அடியார்களுக்கு மரணம் ஏற்படாது என்று தவறாக பொருள் கொள்ளக் கூடாது. அவர்களது உயிர் உடலிலிருந்து பிரியும் தருணத்தில், பெருமானின் கணங்கள், அந்த அடியார்களை அழைத்துச் சென்று பெருமானின் திருவடிக்கீழ் சேர்ப்பார்கள். அத்தகைய அடியார்கள், இயமனால் அழைத்து செல்லப்பட்டு நரகம் சொர்க்கம் ஆகியவற்றில் ஆழ்ந்து துன்பம் அடையார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.
பொழிப்புரை:
நிறைந்த கடல் நீர் இருப்பதால் குளிர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருவெண்காடு தலத்தில் உள்ள இறைவனின் திருவடிகளில், நறுமணம் நிறைந்த மாலைகளும் நிறைந்த சந்தனமும் தூவி வழிபட்ட நன் மறையவனாகிய சுவேதகேதுவின் மீது தனது பாசத்தை வீசி அவனது உயிரினைக் கவர முயற்சி செய்த இயமனை இறைவன் காலால் உதைத்து அழித்த பின்னர், திருநீலகண்டரின் அடியார்கள் என்று இயமனின் தூதுவர்கள் அவரிடமிருந்து அஞ்சி விலகுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


