மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

114. உரையினில் வந்த பாவம் - பாடல் 2

பிறவிகள் எழுகின்றன

News image
Updated On :17 நவம்பர் 2018, 6:30 pm


பாடல் 2:

    ஊன் அடைகின்ற குற்றம் முதலாகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும்
    வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதியான வேத விகிர்தன்
    கானிடை ஆடி பூதப் படையான் இயங்கு விடையான் இலங்கு முடிமேல்
    தேனடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திருநாரையூர் கை தொழவே

விளக்கம்:

முந்தைய பாடலில் மனம் மொழி மெய்களால் விளையும் பாவங்களுக்கு காரணமாகிய  குற்றம் பிணி நோய் ஆகிய மூன்றும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றன. உயிரின் குற்றமே மலங்களுடன் பிணைந்து இருப்பதே. அந்த மலங்களின் சேர்க்கையால் ஏற்படும் வினைகளின் காரணமாகத் தானே பிறவிகள் எழுகின்றன. பிறப்பு எடுத்த பின்னர், பழைய வினைகளை நுகரும் நாம் மேலும் பல குற்றங்களை செய்து பாவ வினைகளை சேர்த்துக் கொள்கின்றோம். இந்த வினைகளை தீர்த்துக் கொண்டு தனது நிலையினை உயர்த்திக் கொள்ளவே உயிர் விரும்புகின்றது. அந்த விருப்பத்தினை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வது என்பதை சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஒருங்கும்=கெடும்; ஊன்=உடல்; இயங்கு விடையான்=விடையின் மீது அமர்ந்து பல இடங்கள் செல்பவன். விதி=வாழ்க்கை நெறிமுறைகள்; ஆடி என்ற சொல் இங்கே பெயர்ச் சொல்லாக வந்துள்ளது. ஆடி=ஆடுபவன்; 

பொழிப்புரை:

உயர்ந்த வானில் உலவும் வெள்ளை மதியினைத் தனது தலையில் சூடியவனும் வாழ்க்கை நெறிமுறைகளை எடுத்துரைக்கும் வேதங்களை அருளி அதனில் வல்லவனாக திகழ்பவனும். காட்டில் நடம் ஆடுபவனும், பூத கணங்களைத் தனது படையாக உடையவனும், இடபத்தை வாகனமாகக் கொண்டு பல இடங்கள் செல்பவனும், ரீங்காரம் இட்டுக் கொண்டு தேனைத் தேடிக் கொண்டு வரும் வண்டுகள் வந்தடையும் மலர்கள் சூடிய சடையினை உடையவனும், நமக்குத் தலைவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருநாரையூர் தலத்தினை கை தொழுதால், உயிர்கள் மீண்டும் மீண்டும் உடல்களை சென்று அடையும் குற்றமும், பிறவி எடுப்பதால் உயிர்களுக்கு மனம் மொழி மெய்களால் சேர்கின்ற தீய வினைகளும் முற்றிலும் அழிந்து விடும்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.