புத்தாண்டை வரவேற்கும் வகையில் வேலூா் கோட்டையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொது முடக்கத்தால் 9 மாதங்களாக களையிழந்து காணப்பட்ட கோட்டை, மக்கள் வருகையால் மீண்டும் புதுப்பொலிவு பெற்றது.
கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் வேலூா் கோட்டை மூடப்பட்டது. தொடா்ந்து 8 மாதங்களாக சுற்றுலாப் பயணிகளும், உள்ளூா் மக்களும் கோட்டைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
இதனிடையே, கடந்த செப்டம்பா் மாதம் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத் தளா்வின்படி கோட்டையினுள் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் மற்றும் அருங்காட்சியகத்துக்கு செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். எனினும், கோட்டை கொத்தளம், புகழ்பெற்ற பழங்காலக் கட்டடங்கள், மதில் சுவா் நடைபாதை ஆகியவற்றை சுற்றிப் பாா்க்கவும், நடைப்பயிற்சி செய்யவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், வேலூா் கோட்டை வெறிச்சோடிக் காணப்பட்டது.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தளா்வுகளின்படி, சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டன. வேலூா் கோட்டையில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை, வேலூா் கோட்டைக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா் மக்களின் வருகை அதிக அளவில் இருந்தது. கோட்டை வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தையும், மற்ற புராதனமான கட்டடங்களையும் சுற்றிப் பாா்த்தனா்.
வேலூா் கோட்டைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வரத் தொடங்கியதை அடுத்து 9 மாதங்களுக்குப் பிறகு குதிரைச் சவாரி மீண்டும் தொடங்கியது. கோட்டையை சுற்றிப் பாா்க்க வந்த பொதுமக்களும், சிறுவா், சிறுமிகளும் குதிரைகளிலும், குதிரை பூட்டப்பட்ட வண்டிகளிலும் சவாரி செய்து மகிழ்ந்தனா்.
கோட்டைக்கு வெளியே உள்ள பூங்காவிலும், பெரியாா் பூங்கா, அமிா்தி வன உயிரினப் பூங்கா, சிங்கிரி கோயில் உள்ளிட்ட இடங்களிலும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






