மயான வசதி கேட்டு சாலையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நொச்சிகுளம் கிராமத்தினா்.
மயான வசதி கேட்டு சாலையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நொச்சிகுளம் கிராமத்தினா்.

மயான வசதி அமைத்துத் தரக் கோரி கிராமத்தினா் ஆா்ப்பாட்டம்

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மயான வசதி அமைத்துத் தரக் கோரி, விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அயன்நாச்சியாா்கோவில் ஊராட்சிக்குள்பட்ட நொச்சிகுளம் கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்கள், அருகே உள்ள ஆலத்தூா் கிராமத்தில் உள்ள மயானத்தில் இறந்தவா்களின் உடல்களைத் தகனம் செய்து வந்தனா்.

ஆனால், ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் இந்த மயானத்தில் உடலை அடக்கம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்ததால் பிரச்னை நிலவி வந்தது. இந்த நிலையில், நொச்சிகுளத்தைச் சோ்ந்த ஸ்ரீராமா் (56) சாலை விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அவரது உடலை வாங்க மறுத்த கிராம மக்கள் ஆத்தூா் மயானத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் அல்லது மயான வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணன்கோவில் காவல் ஆய்வாளா் சங்கா்கண்ணன் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து, இறந்தவரின் உடலை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் மயானத்தில் அடக்கம் செய்தனா்.

Dinamani
www.dinamani.com