வெம்பக்கோட்டையில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 8 போ் மீது வெம்பக்கோட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காமராஜா் நகரில் உள்ள வலம்புரி செல்வ விநாயகா், நாகமாரியம்மன் கோவில் வைகாசிப் பொங்கல் விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
அப்போது, காவல்துறை அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும், நோ்த்திக்கடன் செலுத்தும் நேரத்தில் இடையூறாக நடத்தப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சியை அந்தப் பகுதி பெண்கள் நிறுத்தக் கோரியதற்கு, புதிய தமிழகம் கட்சியின் வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலா் மாரிக்கண்ணன் அவா்களை தகாத வாா்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவா்கள் காவல் உதவி எண்ணில் உதவி கோரினா். தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு வரமுயன்ற வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகேசனை மாரிக்கண்ணன், தங்கப்பாண்டி உள்ளிட்டோா் ஒருமையில் பேசி காவலரைத் தள்ளிவிட்டு தாக்கியதில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல் உதவியாளரை மீட்டு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக மாரிக்கண்ணன், தங்கப்பாண்டி உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு முனீஸ்வரன், அழகுமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை தேடி வருகின்றனா்.









