ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: துர்நாற்றத்தைத் துரத்த...

கடந்த ஒரு வருடமாக வாயில் துர்நாற்றமடிக்கிறது. வாயில் ஊறும் எச்சிலைத் துப்ப இரவில் இரண்டு அல்லது மூன்றுமுறை எழுந்திருக்க வேண்டியுள்ளதால் தூக்கமும் கெடுகிறது. பற்களில் கறையும் மஞ்சள் நிறமும் படர்ந்துள்ள
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: துர்நாற்றத்தைத் துரத்த...
Updated on
2 min read

கடந்த ஒரு வருடமாக வாயில் துர்நாற்றமடிக்கிறது. வாயில் ஊறும் எச்சிலைத் துப்ப இரவில் இரண்டு அல்லது மூன்றுமுறை எழுந்திருக்க வேண்டியுள்ளதால் தூக்கமும் கெடுகிறது. பற்களில் கறையும் மஞ்சள் நிறமும் படர்ந்துள்ளது. கடந்த ஏழு வருடமாக வெளியூரில் தங்கி ஹோட்டல் மற்றும் மெஸ்ஸில்தான் சாப்பிடுகிறேன். இந்த உபாதைகள் நீங்க வழி என்ன?

ச.ஸ்ரீநிவாஸ், குமாரபாளையம்.

துர்நாற்றம் மற்றும் மஞ்சள் நிறம் ஆகியவை பித்ததோஷ சீற்றத்தின் தனி வெளிப்பாடே என்று ஆயுர்வேதம் உறுதிபடக் கூறுகிறது. கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதிகளிலிருந்து உங்களுக்குப் பித்த ஊறல் அதிகமாக உள்ளதை இவை காட்டுகின்றன. இரவில் இட்லி சாம்பார் சட்னியுடன் சாப்பிடும் நபர்களுக்கு, அதிலுள்ள உளுந்து சீரணமாவதன் வாயிலாக, இந்தத் துர்நாற்றம் மற்றும் மஞ்சள் நிறம் ஏற்படக் கூடும். உங்களைப் பொறுத்தவரை, இரவில் புழுங்கலரிசிக் கஞ்சி அல்லது புழுங்கலரிசி கஞ்சியுடன் மோர் கலந்து சாப்பிடுவதே நல்லது. பச்சரிசி வேக வைத்த சாதத்துடன் பால் கலந்து சாப்பிடுவதும் நல்லதே. இவை அனைத்தும் பித்த ஊறலைக் கட்டுப்படுத்தும் நல்ல உணவு வகைகளாகும்.

""பித்தே திக்த: ததஸ்வாது: கஷாயஸ்ச ரúஸôஹித:'' என்கிறார் வாக்படர் எனும் ஆயுர்வேத முனிவர். பித்த ஊறலைக் கட்டுப்படுத்துவதில் கசப்புச் சுவைதான் சிறந்தது, அதற்கு அடுத்ததாக இனிப்பும், அடுத்தபடியாக துவர்ப்புச் சுவையும் சிறந்தவை என்று அதற்கு அர்த்தமாகும்.

ஹோட்டல் மற்றும் மெஸ்ஸில் கசப்புச் சுவை கொண்ட உணவு வகைகளான மணத்தக்காளிக் கீரை, வெந்தயக் கீரை, பாகற்காய், சுண்டைக்காய் என்றெல்லாம் சமைத்துப் போட்டால் அங்கு யாரும் வரமாட்டார்கள். வியாபாரமும் படுத்துவிடும். உங்களுக்கோ சமைப்பதற்கு நேரமுமில்லை. இப்படி இக்கட்டான நிலையில் உள்ள உங்களுக்கு, முனிவரின் உபதேசத்தை எப்படிப் பயன்படுத்த முடியும்? அதற்கு ஒரு வழி இருக்கிறது. சுவையில் கசப்பான வேர் கொண்ட விலாமிச்சை, வெட்டிவேர் மற்றும் சந்தனத்தை சிறு மூட்டையாகக் கட்டி மண் பானைத் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

மொட்டை மாடியில் சந்திரனின் ஒளிக்கதிர்கள் படும்படி பானையின் வாயை மெல்லிய துணியால் கட்டியும் இதைச் செய்யலாம். இந்தத் தண்ணீரைக் காலையில் பருகுவதால் பித்த ஊறலை மட்டுப்படுத்தி, உங்களுடைய வாய் துர்நாற்றம் மற்றும் மஞ்சள் கறையிலிருந்து விடுபடலாம். வாய் கொப்பளிப்பதற்கு இந்தப் பானைத் தண்ணீரையே பயன்படுத்தவும்.

இரவில் படுக்கும் முன் ஜாதிக்காயைச் சீவல் போல சீவி வைத்துக் கொண்டு, சிறிய அளவில் வாயில் போட்டு மென்று தின்றுவிடவும். நல்ல தூக்கத்தைத் தரும். வாயில் அதிக எச்சில் ஊறுவதை மட்டுப்படுத்தும். வயிற்றில் பித்த சுரப்பையும் தடுக்கும்.

இருமாதங்களுக்கு ஒரு முறை சூரத்தாவரை இலை, ரோஜாமொக்கு, காய்ந்த திராட்சை, பிஞ்சுக் கடுக்காய், சுக்கு ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து இரவு முழுவதும் சுமார் 300 மி.லி. தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க, நீர்ப் பேதியாகி குடலிலிருந்து தேவையற்ற பித்தத்தை வெளியேற்றிவிடும்.

உணவில் உப்பு, புளி, காரம் குறைக்கவும். நொறுக்குத் தீனி எனப்படும் மிக்ஸர், முறுக்கு, சிப்ஸ் போன்றவற்றை மாலை வேளைகளில் சாப்பிடுவதை நிறுத்தி, நல்ல இனிப்புச் சுவையுள்ள பழங்களாகிய வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள், பலாப் பழம், சப்போட்டா போன்றவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டைச் சாப்பிடவும். காப்பி, டீக்குப் பதிலாக ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, காம்ப்ளான் போன்றவற்றில் ஒன்றைப் பாலுடன் கலந்து பருகவும். உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com