தமிழ்த் திரையுலகின் இளம் பெண் இயக்குநர் மதுமிதா. "வல்லமை தாராயோ' "கொல கொலயா முந்திரிக்கா' ஆகிய படங்களை இயக்கி அனைவருடைய கவனிப்புக்கும் உள்ளானவர். பிறந்தது சென்னையில். படித்தது இந்தோனேஷியா, சிங்கப்பூரில். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள "நியூயார்க் ஃபிலிம் அகாடமி'யில் டைரக்ஷனுக்காகப் படித்திருக்கிறார்.
திரைத்துறையில் இவர் சிறகடிக்க ஊக்கம் தருபவர் கணவர் விஜய் வெங்கட்ராமன். தந்தை சுந்தர்ராமன் தொழிலதிபர். அம்மா நளினி சுந்தர்ராமன் சிறந்த நிர்வாகி. அறிமுகப் படலத்திற்குப் பின் அவரிடம் கேட்டோம்.
நவீன உலகில் நவீனப் பெண்ணாகிய நீங்கள் பயன்படுத்தும் நவீனம் என்ன? என்று.
""நான் ஒரு கேமரா வைத்திருக்கிறேன். கேனான் எஸ்எல்ஆர் கேமரா. எஸ்எல்ஆர் கேமரா என்றவுடன் ஃபிலிம் பயன்படுத்தும் கேமரா என்று நினைத்துவிடாதீர்கள்.
இது டிஜிட்டல் கேமரா. டிஜிட்டல் கேமராவில் அப்படியென்ன புதுசு என்று கேட்கிறீர்களா?
சாதாரணமாக, டிஜிட்டல் கேமராவில் எல்லாமே ஆட்டோமேடிக்காக இருக்கும். படத்தை வியூ ஃபைண்டரில் பார்த்து "கிளிக்'க வேண்டியதுதான். ஆனால் இந்தக் கேமராவில் நீங்கள் விரும்பியபடி ஷட்டர் ஸ்பீடு, அபெக்சர் எல்லாம் வைத்துக் கொள்ள முடியும். ஃபிலிம் கேமராவில் படமெடுத்தால் படத்தில் கிரெய்ன் தெரியும். இந்த கேமராவில் படம் படுசுத்தமாக, தெளிவாக இருக்கும்.
எந்தக் கேமராவில் படம் எடுத்தாலும் அந்தப் படம் ஒற்றைப் பரிமாணத்துடன்தான் இருக்கும். ஒருவரை அவரின் எதிரில் நின்று படம் எடுத்தால் அவர் முன்பக்கத்தை மட்டுமே சாதாரணக் கேமராவில் படம் பிடிக்க முடியும். என்னுடைய இந்தக் கேமராவில் ஒருவரின் எல்லாப் பக்கங்களையும் ஒரே நேரத்தில் படம் பிடிக்க முடியும். இதை 360 டிகிரி ஸ்டாப் மோஷன் என்பார்கள்.
இந்தக் கேமராவை வைத்து லட்சக்கணக்கான புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன்.
நான் டைரக்டர் என்பதால் ஏதோ சினிமா ஸ்டில் எடுப்பேன் என்று நினைத்துவிடாதீர்கள். எல்லாமே சினிமா தவிர்த்து வீட்டு விசேஷங்கள், டூர் போகும் போது எடுத்த படங்கள். சினிமாத்துறைக்கு இந்தக் கேமராவை லொக்கேஷன் பார்க்கப் போகும்போது மட்டும் பயன்படுத்தியிருக்கிறேன்'' என்கிறார் முகம் எல்லாம் மலர்ந்திருக்கும் சிரிப்புடன்.