ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்தச் சுரப்பிற்குச் சம்பா கோதுமை!

எனக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன் குடல் இறக்கம் ஆபரேஷனும் கருப்பையில் கட்டி இருந்ததால் கருப்பை ஆபரேஷனும் செய்து எடுத்துவிட்டனர். தற்சமயம் இரவு தூக்கத்தில் வயிற்றில் ஒரு கொதிநிலை உணர்வு ஏற்படுகிறது. சில
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்தச் சுரப்பிற்குச் சம்பா கோதுமை!
Updated on
2 min read

எனக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன் குடல் இறக்கம் ஆபரேஷனும் கருப்பையில் கட்டி இருந்ததால் கருப்பை ஆபரேஷனும் செய்து எடுத்துவிட்டனர். தற்சமயம் இரவு தூக்கத்தில் வயிற்றில் ஒரு கொதிநிலை உணர்வு ஏற்படுகிறது. சில சமயம் கால் பாதம், உள்ளங்கையிலும் சூடு அதிகமாகிறது. இது எதனால்? இதை மாற்ற வழி என்ன?

ஆர். முத்துலட்சுமி, மதுக்கரை.

ஆபரேஷனுக்கும் நீங்கள் குறிப்பிடும் உபாதைக்கும் சம்பந்தமிருப்பதாகத் தெரியவில்லை. நடு இரவில் வயிற்றில் பித்த சுரப்பு அதிகமாகி, புளிப்பு மிகுதியால் இந்த உபாதை தோன்ற வாய்ப்பிருக்கிறது. சம்பா கோதுமையை லேசாக வறுத்து மிக்சியில் அரைத்து அத்துடன் அரைப் பங்கு தூளான சர்க்கரை சேர்த்து இரவு தூக்கத்தின்போது அருகில் வைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நெய்யும் சேர்த்துக் கொள்ளலாம்.

வயிற்றில் கொதிநிலை உணர்வு தோன்றும்போது, படுக்கையில் இருந்தபடியே இந்தத் தூளில் 2 -4 ஸ்பூன் சாப்பிட்டுத் தண்ணீர் பருகி உடனே படுத்துவிடவும். நன்றாகத் தூங்கி, காலையில் எழுந்தால் போதுமானது. 10-15 நாட்கள் இந்த மாதிரி சாப்பிட்டு வர, உங்கள் உபாதை குறைய நல்ல வாய்ப்பிருக்கிறது. இதைக் கர்ப்பிணிகள், பித்தப் புண் ஏற்பட்டு வயிற்று வலி உள்ளவர்களும், விடியற் காலையில் புளித்துக் கசந்து நீராக வாந்தி செய்பவர்களும் சாப்பிடலாம்.

நீங்கள் அரிசி, உளுந்தம் பருப்பு, எள்ளு இந்த மூன்றையும் 4-2-1 என்ற அளவில் சேர்த்து, லேசாக வறுத்துப் பெருந்தூளாக்கிக் கொள்ளவும். இதனைக் கஞ்சியாக்கி வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். நடு இரவில் ஏற்படும் உடல் உட்புறச் சூட்டைத் தணிக்கும் உணவாகவும் மருந்தாகவும் இது பயன்தரும். தாகத்தைத் தணிக்க ஆறிய வென்னீர், இளநீர், பதனீர் போன்றவற்றைச் சாப்பிடலாம். குடல் உட்புற வேக்காளத்தைக் குறைக்க மொந்தன் அல்லது பேயன் வாழைப்பழம், பனம் நுங்கு, காய்ந்த திராட்சை, பேரீச்சை, தர்பூசணி, கிர்ணி பழம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சர்க்கரை சேர்த்த பழச்சாறு, குளுக்கோஸ் தண்ணீர், சர்க்கரை கரைத்த தண்ணீர், தேங்காய்ப் பால், சர்க்கரை கரைத்த மோர், நெய்யில் வதக்கிய காய்ந்த திராட்சை போன்றவற்றில் எவை உங்களுக்கு ஒத்துக் கொள்ளுமோ அவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

குடலின் கொதிநிலையைக் கட்டுப்படுத்தி பித்த ஊறலைப் பேதியாக வெளியேற்றும் அவிபத்தி எனும் ஆயுர்வேத சூரண மருந்தை, நீங்கள் காலையில் குறிப்பிட்ட கஞ்சியைக் குடித்து, நன்றாகச் செரித்த பின்னர், மதிய வேளையில் 1-2 ஸ்பூன் எடுத்து 3-4 ஸ்பூன் தேன் சேர்த்துக் குழைத்துச் சாப்பிடவும். பித்த ஊறலின் தேவையற்ற அளவை இந்தச் சூரணம் வெளியேற்றுவதால், உங்களுடைய உபாதைகள் அனைத்தும் விரைவில் குணமாகிவிடும். மாதத்தில் ஒருமுறை இந்த மருந்தை சுமார் 5-6 மாதங்களுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

உணவில் காரம், புளி, உப்பு குறைத்து, இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட உணவுவகைகளை அதிகம் சேர்க்கவும். பகல் தூக்கம் தவிர்க்கவும். வெயிலில் செல்ல நேர்ந்தால் குடையைப் பயன்படுத்தவும். ரப்பர் காலணிகளைத் தவிர்த்து, நல்ல குஷன் வைத்துத் தயாரிக்கப்பட்ட தரமான செருப்புகளை மட்டுமே பயன்படுத்தவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com