காலை உணவாகப் புழுங்கலரிசிக் கஞ்சி, சிறிது பசு நெய் மற்றும் உப்பு சேர்த்து வெதுவெதுப்புடன் பருக, வயிற்றிலுள்ள பாசகபித்தம் அந்தக் கஞ்சியை எளிதாகச் செரிக்கச் செய்து உடல் போஷணையைக் கூட்டுவதுடன், தன் நிலையையும் மேம்படுத்திக் கொள்ளும். மதிய உணவாக, சூடான சாதத்துடன் பருப்பு நெய் கலந்து, தெளிவான தக்காளி ரசம், கொத்தமல்லி சட்னி அல்லது கருவேப்பிலைத் துவையல், மிளகு சீரகம் தேங்காய் சேர்த்தரைத்த புடலங்காய்க் கூட்டு, வெண்ணெய் கடைந்தெடுத்த மோர், மாங்காய் ஊறுகாய் சாப்பிட நல்லது. இரவில் கோதுமை ரவா உப்புமா அல்லது சப்பாத்தி, சப்ஜி ஆகியவற்றை வெதுவெதுப்பாகச் சாப்பிட நல்லது. பசியின் வேகம் சமச்சீரான வகையில் அமைந்துவிட்டால், சியவனபிராசம், கூஷ்மாண்ட ரசாயனம், அமிருத பிராச கிருதம், விதார்யாதிகிருதம் போன்ற மருந்துகளில் ஒன்றிரண்டை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வர, உபாதைகள் விரைவில் நீங்க வாய்ப்பிருக்கிறது.