டிசம்பர் 26: நெருப்பு வளையமாகச் சூரியன்!
2019 டிசம்பர் 26 அன்று காலை 9:31-இலிருந்து சில நிமிடங்கள் வரை வானில் ஓர் அற்புத காட்சி நிகழப் போகிறது.


2019 டிசம்பர் 26 அன்று காலை 9:31-இலிருந்து சில நிமிடங்கள் வரை வானில் ஓர் அற்புத காட்சி நிகழப் போகிறது. தமிழகத்தில் பல்வேறு புகுதிகளில் நெருப்பு வளையம் பகுதி அளவாகத் தெரியும். இந்த நிகழ்வைக் காண தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பிரத்யேக கண் கண்ணாடிகளும் தயாரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளன.
இந்த அற்புத காட்சி குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட செயலரும், இலஞ்சி,ராமசாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியருமான சுரேஷ்குமார் நம்மிடம் கூறியது:
""அன்று காலை சுமார் 8 மணியளவில் சூரிய கிரகணம் தொடங்கும். கிழக்கு வானில் உதயமாகும் சூரியனின் மேற்பகுதியில் அதாவது சூரியனின் மேற்கு திசையில் முதலில் நிலவு மறைக்கத் தொடங்கும். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக சூரிய பிம்பம் மறைந்து பின்னர் காலை 11:16 வரை இவ்வாறு பிறை வடிவில் சூரியன் காட்சி தரும். அதன் பின்னர் கிரகணம் விலகி சூரியன் முன்பு போல் முழுமையாகக் காட்சி தரும். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் சில நிமிடங்கள் வரை தீ (நெருப்பு) வளையம் போல சூரியன் அற்புதமாகக் காட்சி தரும். சுமார் இரண்டு நிமிடம் வரை நீடிக்கும் இந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக மாணவர்களுக்கு இருக்கும்.
தமிழகத்தில் கோயம்புத்தூர், ஊட்டி, திருச்சி, புதுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் இந்த அற்புத காட்சி முழுமையாகத் தெரியும். சூரியனின் நடுவில் பெரிய பொட்டு போல் நிலவின் கருமை பகுதி மறைத்துக் கொள்ள விளிம்புப் பகுதி நெருப்பு வளையம் போலக் காட்சி தரும். இதையே வளைய சூரிய கிரகணம் என்பார்கள்.
கிரகணம்
சூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான் பொருளின் நிழல் மற்றொரு வான் பொருளில் விழுவதைத்தான் கிரகணம் என்கிறோம். சூரியனை மறைத்து நிலவின் நிழல் விழும்போது அது சூரிய கிரகணம், பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்து அது மறையும்போது அது சந்திர கிரகணம்.
பொதுவாக நிலவும் சூரியனும் ஒரே காட்சியளவில் இருக்கும் என்றாலும் சில சமயம் நிலவின் அளவு சூரியனைவிட சற்றே சிறிதாக அமையும். அப்போது சூரியனின் விளிம்பு பகுதி மட்டும் மறைபடாமல் நெருப்பு வளையம் போல தென்படும். நிலவு, பூமியைச் சுற்றும் பாதை வட்டம் அல்ல; கோழி முட்டை வடிவான நீள்வட்டம். அதே போல பூமியும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.
எனவே நிலவுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு கொஞ்சம்,கொஞ்சமாக அதிகரிக்கும். அதன் பின்னர் கொஞ்சம்,கொஞ்சமாகக் குறையும்.
பூமியும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது. எனவே சூரியனும், அருகாமை நிலையில் உள்ளபோது பெரிதாகவும், மிக தொலைவில் உள்ளபோது சிறிதாகவும் தென்படும்.
வருகின்ற டிசம்பர் 26 அன்று பூமி சூரியனுக்கு நெருக்கமாக இருக்கும். எனவே சூரியனின் தோற்றம் பெரிதாக இருக்கும். இதன் காரணமாக தோற்ற அளவில் பெரிதாக இருக்கும் சூரியனை தோற்ற அளவில் சிறிதாக இருக்கும் நிலவு மறைக்க முயலும் போது முழுதாக மறைக்க முடியாது. சூரியனின் விளிம்பு நிலவின் வட்டத்தைத் தாண்டி அமையும். எனவே தான் அன்று வானில் நெருப்பு வளையம் போல தென்படும்.
கிரகணத்தின் போது உடலைப் பாதிக்கக் கூடிய கதிர்கள் வருகின்றன; எனவேதான் சூரிய கிரகணத்தை வெறும் கண்களில் பார்க்கக் கூடாது என்ற தவறான கருத்து உள்ளது. கிரகணம் எனபது நிழல் தான். மரத்தின் நிழலில் இருப்பதும், நிலவின் நிழலில் இருப்பதும் ஒன்று தான். கிரகணத்தின் போது சூரியனில் எந்தவித மாற்றமும் ஏற்படுவது இல்லை. எனவே எந்தவித மர்ம கதிர்களும் வருவது இல்லை.
கண்ணிற்குப் பாதுகாப்பு
சூரியனில் இருந்து வரும் நேரடி கதிர்கள் மிகவும் பிரகாசமாகவும், வெப்பமாகவும் இருக்கும். நமது கண்கள் மிகவும் சிக்கலானவை. மேலும் உணர் உறுப்பான விழித்திரையில் உள்ள கூம்பு மற்றும் குச்சி செல்கள் குறைந்த வெளிச்சத்தில் பார்க்கவும், மின் சமிக்ஞைகளை மூளைக்கு கடத்தவும் அதன் மூலம் உருவங்களைப் பார்க்கவும் உதவுகின்றன. ஆகவே மிகவும் பிரகாசமான நேரடி சூரிய ஒளிக் கதிர்களைப் பார்ப்பதால் அவை நம்மை நிரந்தரமாக குருடர்களாக்கும் என்பதால்தான் கண்ணாடிகள் அணிந்து பார்க்கக் கூறுகிறோம். கிரகணம் இல்லாத சாதாரண நாள்களிலும் சூரியன் வெப்பமாகத்தான் இருக்கும். ஆனால், நாம் யாரும் சாதாரண நாட்களில் சூரியனை நேரடியாக பார்ப்பது இல்லை. அதனால்தான் கண்ணாடி அணிய சொல்கிறோம்.
தொலைநோக்கி, பந்து கண்ணாடி, ஊசித்துளை கேமரா, சூரிய ஒளியின் அளவை கட்டுப்படுத்தும் சூரிய கண்ணாடிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி அற்புத நிகழ்வைப் பார்க்கலாம். தமிழ்நாடு முழுவதும், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகளிடம் சூரிய ஒளியைக் கட்டுப்படுத்தும் கண்ணாடிகள் கிடைக்கும்.
திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் பகுதி அளவாக இந்நிகழ்வைக் காண முடியும் இதை பார்வையிடுவதற்கான சிறப்பு கண்ணாடிகள் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலரிடம் கிடைக்கும்'' என்றார் சுரேஷ்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...