ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செரிமான கோளாறு நீங்க...

எனக்குஅடிக்கடி செரிமானக் கோளாறு ஏற்படுகிறது. 
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செரிமான கோளாறு நீங்க...
Updated on
2 min read

எனக்குஅடிக்கடி செரிமானக் கோளாறு ஏற்படுகிறது. பசியின்மை, வயிறு உப்புசம், ஏப்பம், அஜீரணம், மலச்சிக்கல், கீழ்க்காற்றுத் தடை, அதனால் உடல் சோர்வு, பலவீனம், ருசியின்மை, உணவில் வெறுப்பு என்றெல்லாம் ஏற்படுகிறது. இது எதனால்? எப்படி குணப்படுத்திக் கொள்வது?
ராகவன், ஸ்ரீரங்கம்.

கனமான, செரிப்பதில் கடினமான உணவு வகைகள், லேசான, செரிப்பதில் எளிதான உணவு வகைகள் என இருவிதமாக உணவை ஆயுர்வேதம் பிரித்துக் கூறுகிறது. தன் பசிக்குத் தகுந்தவாறு உணவை ஏற்பவன் நோய்நொடியின்றி பலகாலம் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்றும் ஆயுர்வேதம் 
அறிவுறுத்துகிறது.

நீங்கள் குறிப்பிடும் வகையில் பசியற்ற நிலை என்பது எண்ணற்ற நோய்களுக்குக் காரணமாகலாம். அதனால் எளிதில் செரிக்கும் வகையில், பசியை தூண்டக் கூடிய உணவுப் பதார்த்தங்களைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.

நெல் பொறி, சுக்கு, தனியா, அரிசித் திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கையால் தயாரிக்கப்படும் கஞ்சி நீரை, சிறிது இந்துப்பு கலந்து, வெதுவெதுப்பாக, காலை உணவாக சில நாள்கள் ஏற்க, பசியின் தீவிரமானது  கூடி, ஆரோக்கியத்தை மேம்படுத்தித் தரும். 

முன்னூறு கிராம் நெல் பொறியில், மற்ற மூன்று சரக்குகளை வகைக்கு ஐந்து கிராம் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, அனைத்தும் வெந்துள்ள நிலையில் வடிகட்டி சிறிது  உப்புடன் கலந்து காலை உணவாக சுமார் ஏழு நாள்கள் வரை சாப்பிடவும். கருவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை அரைத்து, சட்டினியாக்கி தொட்டு சுவைத்து சாப்பிடவும். வயிற்றுலுள்ள அமிலச்சுரப்பானது இதனால் மேம்படும்.

அதன்பிறகு மிளகு குழம்பு தயாரித்து, சூடான சாதத்துடன் கலந்து சிறிது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து, காலை உணவாக சிறிது நாள்கள் சாப்பிட, உடல் உபாதைகள் அனைத்தும் குணமாகிவிடும். மிளகு குழம்பு தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றியூ டியூபில் விரிவாக எடுத்துக் கூறுகின்றனர்.

உணவிற்குப் பிறகு, ஓமம், சோம்பு, கிராம்பு, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றை சிறிய அளவில் சாப்பிட, குமட்டல், ஏப்பம், ருசியின்மை போன்ற தொல்லைகள் அனைத்தும் விலகிவிடும். ஆயுர்வேத மருந்தாகிய 'தசமூலாரிஷ்டம்' சுமார் முப்பது மில்லி  அருந்துவதும் நல்லதே!

பல மூலிகைகளின் சேர்க்கையால் உருவாக்கப்படும் கந்தர்வஹஸ்தாதி கஷாயம், சிட்டிகை இந்துப்பு, வெல்லம் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகிவர, ருசியின்மை, பசியின்மை, வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்றவை நீங்கி, பசி நன்றாக ஏற்படும். குடல் உட்புறக் குழாயை நன்றாகச் சுத்தப்படுத்தி, அமிலச்சுரப்பை மேம்படுத்தும் இந்த மருந்து தற்சமயம் விற்பனையிலுல்லது.

அஷ்ட சூரணம், ஹிங்குவசாதி சூரணம், வைஷ்வாரை சூரணம் போன்றவற்றில் ஒன்றை மதிய உணவுக்கு அரை மணி முன் வென்னீருடன் பருகுவதும் நல்லதே. குடல் அடைப்புகளை நீக்கி, பசியைத் தூண்டிவிடுவதில் மிகவும் சிறந்து மருந்துக் கலவைகள் இவை.

சுக்கும் சித்தரத்தையும் வகைக்கு ஐந்து கிராம் எடுத்து,  அரை லிட்டர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, சிறிது சிறிதாகப் பருகிவரும் கிராம வைத்திய முறையினாலும் நீங்கள் நன்மை அடையலாம். நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் அனைத்தும் இன்று சிறுபிள்ளைகளுக்கும் ஏற்படுகின்றன.
வில்வாதிலேஹியம், பிப்பல்யாஸவம், அரவிந்தாஸவம் போன்ற நல்ல மருந்துகளால் அவர்கள் பயனடையலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com