

1990களின் இறுதியில் மேற்கத்திய நாடுகளில் வேர்விடத் தொடங்கியது வெப் சீரிஸ். தற்போது இந்திய ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. டெலிவிஷன் சீரிஸ் பாணியிலேயே அமைந்த வெப் சீரிஸ், உலகெங்கும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது.
தமிழகத்திலும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் போன்ற தளங்கள் சகஜமாகப் புழங்கத் தொடங்கிவிட்டன. ராவான கதைக்களம், சென்சார்களற்ற காட்சிகள், பரபரப்பான திரைக்கதை என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவிதமான அனுபவத்தைத் தருகிறது இந்த வெப்சீரிஸ் களம். ஏற்கெனவே தமிழில் 'ஆட்டோ சங்கர்', 'குயின்', 'விலங்கு' போன்ற வெப் சீரிஸ்கள் கவனம் பெற்றுள்ளன.
தமிழில் என்ன மாதிரியான கதைகள் வெப் சீரிஸ்களுக்கு உகந்தவை, மேற்கத்திய நாடுகளைப் போல பிரபலமான நாவல்களைப் படமாக்குதல் சாத்தியப்படுமா என இயக்குநர்களிடம் பேசினோம்.
இயக்குநர் மகிழ்திருமேனி:
''தமிழ் நாவல்கள் பெரும்பாலும் நினைவுத் தொகுப்பாக உள்ளன. இந்த நினைவுகள் குடும்பங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட கதைகள். தமிழில் நாவல்களுக்கு பஞ்சமில்லை. ஏராளமான எழுத்தாளர்கள் உள்ளனர். ஆனால், திரைக்கதை எழுதுபவர்கள் மிகக்குறைவு. தமிழ் வெப் சீரிஸ்களுக்கு எழுத்தாளர்கள் மட்டும் போதாது. திரை மொழி அறிந்த, தேர்ந்த திரைக்கதை எழுதுபவர்கள் அவசியம் தேவை.
டேவிட் பின்சர் இயக்கிய 'செவன்' படம் போல தமிழ் எழுத்தாளர்கள் கதை எழுத முடியுமா? என்பது சந்தேகமே. பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் குடும்பப் பின்னணியை வைத்து கதை எழுதுபவர்கள்தான். ஓர் எழுத்தாளர் எழுதக் கூடிய கதையைத் திரைப்படமாகவோ, வெப்சீரிஸ் ஆகவே தேர்ந்த திரைக்கதை எழுதுபவர்களால் எடுக்க முடியும். வெப் சீரிஸ் என்பது ஒரு சீரியல்தான். ஆனால், ஒவ்வொரு சீரியல் முடிவின் போதும், அடுத்து என்ன நடக்கப் போகிறது' என்ற விறுவிறுப்புடன் முடிக்க வேண்டும். இதைத் திரைக்கதை எழுதுபவர்களால் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.
தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுதுபவர்களுக்கு என்று தனி அங்கீகாரம் கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுதுவோர் என்று தனி அமைப்பு உருவாக வேண்டும். இப்படி உருவாகும் பட்சத்தில் நல்ல திரைப்படங்களையும் வெப் சீரிஸ்களையும் தமிழில் அதிகம் காணலாம். கச்சிதமான இயக்குநர், எழுத்தாளரின் கதை, விறுவிறுப்பாக திரைக்கதை எழுதுபவர் என்று ஒரு கூட்டணி உருவானால் தமிழ் நாவல்களை வெப் சீரிஸாக, திரைப்படங்களாக எடுக்கலாம். என்னுடைய பார்வையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றை விவரமாக அல்லது வெப் சீரிஸாகவோ எடுக்கலாம். தி. ஜானகிராமனின் 'மோகமுள்' நாவலை ஒரு மணி நேரத்துக்கு ஒரு எபிசோட் ஆக வைத்து சிறப்பான வெப் சீரிஸாக எடுக்கலாம். சுந்தர ராமசாமி எழுதிய 'ஒரு புளியமரத்தின் கதை', ஜெயமோகனின் 'காடு' நாவலுக்குச் சிறப்பான திரைக்கதை எழுதினால் அதை வெப் சீரிஸாக எடுக்க முடியும். ஜி. நாகராஜனின் 'நாளை மற்றும் ஒரு நாளே' வெப் சீரிஸாக எடுக்க உகந்த களம். பல நபர்களின் பயோகிராஃபிகளையும் வெப் சீரிஸாக எடுக்கலாம். இப்படி தமிழ் இலக்கியத்திலிருந்து தமிழ் சினிமாவுக்குத் தேவையான கதைகளை எடுத்துக்கொள்ளலாம்.
என்னுடைய கருத்து இதுதான், நாவலில் கதை வடிவில் இருப்பவற்றை திரைக்கதை வடிவத்துக்கு மாற்றுவதற்கு நம்மைச் சுற்றி நடக்கக்கூடிய நிகழ்வுகளிலிருந்து சினிமா, வெப் சீரிஸ் கதைகளைத் தேர்ந்தெடுக்கலாம்''
என்றார்.
இயக்குநர் விஜய் மில்டன்:
''கதைகளைப் பொருத்தவரை திரைப்படம், வெப் சீரிஸ் என என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. கதையின் போக்கைக் கொண்டு அதைத் தீர்மானிக்கலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் பார்வையிலும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. சிறு வயதிலிருந்து நான் வாசித்த புத்தகங்களில் எந்தப் புத்தகங்களைப் படமாகவோ, வெப் சீரிஸாகவோ எடுக்கலாம் என்று நான் குறித்து வைத்துள்ளேன். வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்' நாவலையும், தாஸ்தேவ்ஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' இரண்டையும் இணைத்து ஒரு படமாக்கலாம்.
'வெண்ணிற இரவுகள்'' பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழில் 'இயற்கை' படம் வெண்ணிற இரவுகளை வைத்து எடுக்கப்பட்டது. ஆனாலும் வெண்ணிற இரவுகள் வைத்து இன்னும் நிறைய எடுக்க முடியும். நாஸ்தென்காவை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. சிறு வயதில் நிறைய ரஷ்ய இலக்கியங்கள் படித்துள்ளேன். அதில் 'வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு' சிறுகதையை வைத்து விறுவிறுப்பான படம் என்னால் இயக்க முடியும். 'மூன்று காதல் கதைகள்', தகழி சிவசங்கர பிள்ளையின் 'ஏணிப்படிகள்', ஜெயகாந்தனின் 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன', பாலகுமாரனின் 'இரும்புக் குதிரைகள்', ஷேக்ஸ்பியரின் ' ட்வெல்த் நைட்' இப்படி பல்வேறு புத்தகங்களைப் படமாக்க முடியும். திரைப்படங்களுக்கான கதைகள் சிதறிக்கிடக்கின்றன. அவற்றை நாம் எவ்வாறு பார்க்கிறோம், எந்தக் கோணத்தில் ஒரு விஷயத்தை அணுகுகிறோம் என்பதில்தான் திரைக்கதையை நம்மால் எழுத முடியும்'' என்றார்.
இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ்:
திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் முக்கியமான பொழுதுபோக்காக மாறியுள்ளது. ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப் சீரிஸ் அமோக வரவேற்பைப் பெருகின்றன. தமிழ் வெப் சீரிஸ்களின் வருகையும் தொடங்கியுள்ளது. வெப் சீரிஸ்களுக்கான ஏற்ற காலமும் இதுதான். கரோனாவுக்கு பின்னர், சினிமா பார்க்கப்படும் விதமே மாறி வந்திருக்கிறது. இதனால், இணையத்தில் வெளியாகும் வெப் சீரியல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் வெப் சீரிஸ்களுக்கான கதைகள் ஏராளம். தமிழ் இலக்கியம், வாய்மொழிக் கதைகள், நாட்டுப்புறக் கதைகளை வெப் சீரிஸ் வடிவத்துக்கு மாற்றியமைக்கலாம்.
ஆனால், இலக்கியங்களும் நாட்டுப்புறக் கதைகளும் மட்டும் போதாது. இதுவரை இருந்த கதைகளைத் தாண்டி புதுப்புது கதைகள் வெப் சீரிஸ்களுக்குத் தேவைப்படும். காதல், நடுத்தர குடும்பம் இப்படியான கதைகள் குவிந்து கிடக்கின்றன. இதைத் தவிர்த்து லாரி ஓட்டுநர், சிறைக்கைதி, போஸ்ட்மார்ட்டம் செய்யும் மருத்துவர், கூலித் தொழிலாளி எனப் பல்வேறு தளங்களில் இயங்கக் கூடியவர்களின் கதைகளை வெப் சீரிஸ்களில் பதிவு செய்யலாம்.
ஒரு நிஜத் திருடரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தமிழில் கச்சிதமாக பதிவு செய்யப்படவில்லை. ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியின் பின்னணி பற்றி நமக்குப் பெரிதாகத் தெரியாது. இதுபோன்ற மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யலாம். மலையாளத்தில் இதுபோன்ற பல்வேறு அடுக்குகளில் வாழக்கூடியவர்களின் கதை தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழிலும் இதுபோன்ற படைப்புகள் வர வேண்டும். தமிழ் வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரிக்கும் நிலையில் புதுப்புதுக் கதை எதிர்பார்க்கப்படும். புதுப்புது கதைகளுக்கான கச்சாப் பொருள்களாக இலக்கியமும், வெவ்வேறு படிநிலைகளில் வாழும் மனிதர்களின் வாழ்வியலும்
இருக்கும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.