பிரபல செல்வந்தர் தனசேகர் மகள் சாந்தியின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. தாலி கட்டியவுடன் மணவிழாவுக்கு வந்தோர் அன்பளிப்பை அளித்து, வாழ்த்தத் தயாராகினர்.
அந்த நேரத்தில் சாந்தி, மணமகன் சேகரின் காதில் ஏதோ கிசுகிசுத்தார். தொடர்ந்து, சேகர் ஒலிபெருக்கியில், "எல்லோரும் விருந்து சாப்பிடுங்க! நாங்கள் இன்னும் பத்து நிமிடங்களில் வந்துவிடுகிறோம்.'' என்று கூறினார். பின்னர், மணமக்கள் சமையல் கூடத்துக்குச் சென்று, டிபன் கேரியரில் சில உணவு வகைகளை எடுத்துகொண்டு காரில் புறப்பட்டு சென்றனர்.
அருகில் இருந்த சாந்தியின் வீட்டை அடைந்து, அங்கு ஒரு மூலையில் வயோதிகத்தால் முனங்கியவாறு படுத்திருந்த தனது பாட்டியை எழுப்பி உட்கார வைத்தனர். பின்னர், அவரது காலில் மணமக்கள் விழுந்து, ஆசிர்வாதம் பெற்றனர்.
"என்ன சாந்தி. தாலி கட்டினவுடன் இங்க வந்திருக்க! சீக்கிரம் கிளம்புங்க?'' என்றார் பாட்டி.
"பாட்டி. என்னை வளர்த்து ஆளாக்குவதில் நீங்க பட்ட பாட்டெல்லாம் உங்கள் அன்பெல்லாம் மறக்க முடியுமா? முதல் ஆசிர்வாதம் நீங்கதான் பண்ணனும். அதுதான் எங்களை நன்றாக வாழ வைக்கும்'' என்றாள் சாந்தி.
தலையணைக்கு அடியில் இருந்த ஐம்பது ரூபாய் நோட்டுகள் இரண்டை எடுத்து, மணமக்களிடம் கொடுத்த பாட்டி, "நீங்க நல்லா இருப்பீங்க?'' என்றார்.
டிபன் கேரியரில் இருந்த உணவை பாட்டிக்கு ஊட்டிவிட்டு, மணமக்கள் காரில் விரைந்தனர் திருமண மண்டபத்தை நோக்கி..!
-இரா.சிவானந்தம், கோவில்பட்டி.