உலகில் மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு 'ஸீலாந்த்' ஆகும். மிகச் சிறிய நாடான வாடிகனைவிட ஸீலாந்து சிறியது.
இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 27 பேர். அதிகாரபூர்வ பெயர் 'பிரின்சிபாலிட்டி ஆஃப் சி ஸீலாந்த்'. இங்கிலாந்தின் வடக்கு கடலில், 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கடுகளவு நாடுதான் ஸீலாந்த். பரப்பளவு வெறும் 550 சதுர மீட்டர். நாணயம் 'ஸீலாந்த் டாலர்'. இந்த நாட்டுக்கென்று கால்பந்து அணி இருக்கிறது. சொந்த ராணுவமும், கொடியும் உள்ளது. ஆங்கிலம் பேசப்படுகிறது.
ஸீலாந்த்தில் வசிப்பவர்கள் சுயமாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட இந்த நாட்டை இதர நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஸீலாந்த்தில் மன்னர் ஆட்சி நடக்கிறது.
இரண்டாம் உலகப் போரின்போது, இங்கிலாந்து கடலில் 'ரஃப் டவர்' என்ற இடத்தை ஜெர்மன் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தியது. 'ரஃப் டவர்' என்பது கடலில் இரண்டு ராட்சஷ தூண்களைக் கட்டி அந்தத் தூண்களை இணைக்கும் தளத்தை அமைத்து அங்கே வசிக்க வீடுகள் கட்டப்பட்டன. போர் முடிந்ததும் இந்த 'கோட்டை'யை அப்படியே கை விட்டுவிட்டது. சொந்தம் கொண்டாடவில்லை.
1967-இல் பேடி ராய் பேட்ஸ் என்பவர் இந்த இடத்தை உரிமை கொண்டாடி, அந்த இடத்தை தனது சொந்த நாடாக அறிவித்தார். தனது குடும்பத்துடன் வசிக்க ஆரம்பித்தார். தன்னை ஸீலாந்த்தின் இளவரசராகவும் அறிவித்துகொண்டார். தனக்கென்று பாஸ்போர்ட், அரசு முத்திரைகளை அவரே தயாரித்து வெளியிட்டார்.
இந்த நாடு கடற்கொள்ளையர்கள், ஹேக்கர்களுக்கானப் புகலிடமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இங்கு வசிப்போரின் குடிநீர் தேவைக்காக மழைநீர் சேகரிக்கப்படுகிறது. ஸீலாந்த்துக்கு படகு, கப்பல் அல்லது ஹெலிகாப்டரில் அரசிடம் முன் அனுமதி பெற்றவுடன் சென்று வரலாம்.
ஆர்ப்பரிக்கும் கடலைத் தவிர ஸீலாந்த்தில் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.