
இயற்கையின் கொடை
மலைகளின் தோற்றமும் அதன் வயதும் அழகியல் அதிசயம்.
மலைகளின் தோற்றமும் அதன் வயதும் அழகியல் அதிசயம். இவ்வாறான அதிசயங்களில் ஒன்றான, இயற்கையின் கொடையான 'பஞ்சபாண்டவர் மலை', இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்.
மதுரை அருகேயுள்ள மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் கீழவளவு கிராமத்தின் பிரதான சாலையின் இரு பக்கங்களிலும் உயரம் அதிகமில்லாத மலைக் குன்றுகள் நிறையப் பிரிந்திருக்கின்றன. கிழக்குக் குன்றின் பகுதியில் இயற்கையாக ஒரு குகையும், இடது பக்கம் பஞ்ச பாண்டவர் மலையும் அமைந்திருக்கின்றன.
இங்கு ஐந்தாறு மலைகள் ஒன்றோடொன்று தொடர்ச்சியாக ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு சில மலைகள் வெட்டி எடுக்கப்பட்டுவிட்டன. அதனால் மீதமிருப்பது பஞ்சபாண்டவர் மலை மட்டும்தான்.
வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ராமேசுவரம் செல்லும் வழியில், பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து தவம் செய்ததால், அவர்களின் பெயர் மலைகளுக்குச் சூட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த மலை 51 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது. ஒரு மலையின் முன்னே முப்பது அடி உயரத்தில் இரண்டு கல் தூண்கள் நிற்கின்றன. மலையில் மகாவீரர் சிற்பத்தை தவக் கோலத்தில் பார்க்கமுடிகிறது.
துறவிகளுக்கான கல்படுகைகள்
இந்த மலையின் அருகேயுள்ள பெரிய குகையின் உள்ளே தரைப்பகுதியில் துறவிகள் தங்குவதற்காக சமன் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட
கல்படுகைகள் உள்ளன. குகையின் வெளியே பாறையில் மழைநீர் உள்ளே விழாதவாறு நெற்றிப் புருவம் போன்ற வடிகாலும், அதனருகே சமணத் துறவிகளுக்கு மருந்துக் குழிகளும் வெட்டப்பட்டுள்ளன. கல்படுகைகள் தொண்டியைச் சேர்ந்த ஒரு சிற்பியால் செதுக்கப்பட்டிருக்கிறது என்று கல்வெட்டு குறிப்பு தெரிவிக்கிறது. இங்கு 9-10- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர், பாகுபலி, பார்சுவநாதர் போன்ற சிற்பங்கள் (தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள்) செதுக்கப்பட்டுள்ளன.
கோட்டோவியங்கள்
ஒரு காலத்தில் சமணப் பள்ளியாக இருந்த இந்த மலைக்கு வருவோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் குகையிலிருந்து சுமார் 200 அடி தூரத்தில் தென்புறத்தில் கிழக்கு முகமாக அமைந்துள்ள பாறைக் குன்றின் அடிப்பகுதியில், சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்டிருக்கும் சில ஓவியக் குறியிடுகள் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் வட்டம், அரை வட்டம், முக்கோணம், சதுரம், நேர்கோடு, கிடை கோடு போன்றவை 'கோட்டோவியங்கள்' எனச் சொல்லப்படுகின்றன. ஓரிடத்தில் பெரிய சுனை இருக்கிறது,
1903-ஆம் ஆண்டில் வெங்கொபா ராவ் என்பவரால், 2,300 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்குப் பக்கத்தில் சுமார் 150 அடி தூரத்தில் உள்ள சில பாறைக் குன்றுகளில் மூன்று யானைகள், மூன்று மான்கள், அண்மைக்கால மண் எடுக்கும் இயந்திரம் போன்றவை பிற்கால கற்செதுக்கு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
மலையின் உள்பகுதிக்குள் சென்றால் மலையேறப் படிக்கட்டுகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே மஞ்சள் நிறத்திலும், செவ்வண்ண நிறத்திலும் சிறிய மலைகள் பலகோணங்களில் காணப்படுகின்றன. பத்து முதல் இருபது அடி கொண்ட சிறிய மலைக்குன்றுகள் சிறிய முனையில் அந்தரத்தில் இருப்பது காண்போரை அச்சத்தில் ஆழ்த்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





