நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாளை நான் ஐஏஎஸ்! பள்ளியிலிருந்தே தொடங்க வேண்டும்!

குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டியாளர்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

News image
Updated On :15 பிப்ரவரி 2016, 2:20 pm

மு.சிபிகுமரன்

குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டியாளர்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

குறிப்பாக பெற்றோர்களுக்கு கீழ்க்கண்ட ஒரு கேள்வி முக்கியமாக எழுகின்றது. என் மகனை, மகளை எந்த வகுப்பு படிக்கும் போதிலிருந்து ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்கு படிக்க வைக்கலாம்?

மிகவும் அவசியமான கேள்வி இது. ஏனெனில், இத்தேர்வுகள் தொடர்பாக நிறைய விழிப்புணர்வு வந்திருக்கின்றது. ஆனால் இது குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதே உண்மைநிலை. அதே வேளையில் விழிப்புணர்வு என்பதனை சமுதாய நோக்கம் கொண்டது எனவும், வணிக நோக்கம் கொண்டது எனவும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

போட்டித் தேர்வினை எழுதிடத் தூண்டுகின்ற சிந்தனையை ஒரு மாணவருக்கு பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும்போது உருவாக்கலாம். அதற்கான அடிப்படையான நூல்களைப் படிக்கவும் வைக்கலாம்.

ஆனால், பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பட்டப்படிப்பிற்கான துறையைத் தேர்வு செய்யும்போது பெற்றோர்கள், பிள்ளைகளின் விருப்பம் மற்றும் திறனுக்கேற்பவும் எதிர்கால இலட்சிய நோக்கினைக் கருத்தில் கொண்டும் வழிகாட்டலாம்.

அதற்கு முன் (பள்ளியில் படிக்கும் காலத்தில்) பெற்றோர் விரும்பினால் மாணவரின் மொழியறிவைப் பொறுத்து, தாய்மொழி நாளிதழையோ அல்லது ஆங்கில நாளிதழையோ தொடர்ந்து படிக்கும் வழக்கத்தினை ஏற்படுத்தலாம். அவர்கள் தாய்மொழி நாளிதழைப் படித்தால் படிப்படியாக ஆங்கில நாளிதழ்களைப் படிக்கின்ற ஆர்வத்தையும் அவர்களிடம் கொண்டு வரலாம்.

நாளிதழ் படிப்பதில் இருக்கின்ற மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அரசியல், பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் சார்ந்து நிகழும் நிகழ்கால மாற்றங்கள் மாணவர்களின் பல்துறை அறிவையும், உலகியல் அறிவையும் மேம்படுத்தவும், கூர்மைப்படுத்தவும் உதவுவதே.

இதை விடுத்து அதீத ஆர்வத்தில் வணிக விழிப்புணர்வை நம்பி பள்ளியில் படிக்கும்போதே பயிற்சியைத் தொடங்கினால் அது மாணவர்களின் ஆர்வத்தை வளர்ப்பதற்குப் பதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடலாம் என்பதனைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த பகுதியில் அறிவியல் தொழில்நுட்பப் பாடத்தில் 2015 ஆம் ஆண்டு கேட்கப்பட்ட ஒரு வினாவினைப் பார்த்தோம். அதற்கான விடையினை நமது குறிப்புகளில் இருந்தே எளிதாகக் கண்டுபிடித்திருக்க முடியும்.

ஆகவே, போட்டித் தேர்வு எழுதுபவர்கள் ஒரு வினாவுக்கான சரியான விடையினை நாம் தேர்வு செய்ய வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட தலைப்பு தொடர்பாக உள்ள விவரங்களைத் தொகுக்க வேண்டும். மேலும் அவற்றை நாமே எழுதித் தொகுத்தால், அதிகச் சிரமமின்றி நினைவில் தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆதலால் குடிமைப்பணித்தேர்வுகளுக்கு தயாராவதைப் பொறுத்தவரையில் பல்வேறு பகுதிகள் பற்றி தெளிவாகப் படித்தலும், தொகுத்தலும் மிகவும் முக்கியமான அங்கமாக இருக்கின்றது.

தேர்வு நோக்கில் கவனிக்க வேண்டிய சில நடப்பு நிகழ்வுகளையும், பின்புலங்களையும் கீழே காணலாம்.

2015 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மயில்சாமி அண்ணாதுரைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனை ஆதாரமாக வைத்து போட்டித் தேர்வர்களாகிய நமது கவனமானது விருது என்ன? பெற்றவர் யார்? என்பதைத் தாண்டி சந்திரயான் விண்கலம் நோக்கி நகர்தல் வேண்டும். ஏனெனில் சந்திரயான் திட்டப்பணியில் அவர் முக்கியப் பங்காற்றியவர்.

இந்தியா சந்திரயான்-1 எனும் நிலவினை ஆய்வு செய்யும் விண்கலத்தினை 22.10.2008 இல் தனது நட்சத்திர ஏவுகலமான பிஎஸ்எல்வி சி-11 மூலம் அனுப்பியது. நிலவின் மேற்பரப்பிலும், பாறைகளிலும் நீர்த்திவலைகள் இருப்பதனை உறுதி செய்யக்கூடிய ஒளிப்படங்களுடள் கூடிய தரவுகளை உலகத்திற்கே முதன்முதலாக அனுப்பிய சாதனைக்குரியது சந்திரயான் விண்கலம் ஆகும்.

அடுத்து, சுற்றுச்சூழல் தொடர்பான சர்வதேச நிகழ்வு குறித்துப் பார்ப்போம்.

புவிவெப்பமாதல், பருவநிலை மாற்றம் போன்றவை இன்று உலகம் முழுக்க பேசப்படுகின்ற கருத்துருவாக உருவெடுத்துள்ளன. இதனடிப்படையில் புவிவெப்பமாதலைக் குறைக்கும் நோக்கோடு உலக நாடுகள் பல்வேறுகட்ட நடவடிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

அந்த வகையில் 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் இதற்கான மாநாடு (COP 21/CMP 11) நடைபெற்றது. அம்மாநாட்டில் INTERNATIONAL SOLAR ALLIANCE (ISA) என்ற சர்வதேசக் கூட்டமைப்பினை ஏற்படுத்துவது மற்றும் அதன் தலைமையகத்தை இந்தியாவில் அமைப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

ஒரு சர்வதேச அமைப்பின் தலைமையகம் ஒன்று இந்தியாவில் அமையவுள்ளது, இதுவே முதல் முறையாகும். இது சூரிய ஆற்றல் உற்பத்தியைப் பெருக்குதல், பயன்படுத்துதல், பலப்படுத்துதல் தொடர்புடைய அமைப்பாகும். இந்த அமைப்பில் 121 நாடுகள் உறுப்பினர்களாக ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடகரேகை மற்றும் மகரரேகைக்கு இடைப்பட்ட நாடுகள் மட்டுமே இந்த அமைப்பில் உறுப்பினர் ஆக முடியும்.

அடுத்து பொருளாதாரம் சம்பந்தமான வகையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடர்பாக ஒரு செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வமைப்பு சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட நான்கு உறுப்பு நாடுகளின் வாக்குரிமை சக்தியை அதிகரித்துள்ளது.

இந்தியாவின் வாக்குரிமை 2.3 சதவிகிதத்தில் இருந்து 2.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. சீனாவின் வாக்குரிமை 3.8 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளின் வாக்குரிமைச் சதவிகிதங்களும் அதிகரித்துள்ளன

இந்த நிதியம் வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

சர்வதேச அளவில் நாணய ஒத்துழைப்பு, உலக அளவில் வர்த்தகத்தினை எளிமைப்படுத்துதல், விரைவான, நிலைத்த, நீடித்த பொருளாதார வளர்ச்சி, உறுப்புநாடுகளின் செலுத்துச் சமநிலையில் (Bop) உள்ள இடர்பாடுகளைக் களைதல் போன்ற குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதியம் செயல்பட்டு வருகின்றது.

அடுத்து வரலாற்றுப் பின்புலம் கொண்ட மற்றொரு நிகழ்வு கவனம் பெறுகின்றது. வாரணாசியில், பழூர் என்னும் இடத்திற்கருகில் நிலபடிமங்கள் அருங்காட்சியகம் ஏற்படுத்தப்படுகிறது.

இதன் நோக்கம் அப்பகுதியில் உள்ள புதைபடிமங்களைப் பாதுகாப்பதும், பதனப்படுத்துவதும் ஆகும். இதுபோன்ற புதைபடிவம் பற்றிய ஆய்வினை PALEONTOLOGY என்கிறோம்.

வரலாற்றுப் பூர்வமாகவும் சில குறிப்புகளை நாம் இத்துடன் தொகுக்கலாம். வாரணாசி, பனாரஸ் என்றும் அழைக்கப்படுகின்றது.

இந்தியாவில் தொடக்க காலத்தில் 16 அரசுகள் அமைந்தன. அவை 16 மகாஜன பதங்கள் எனப்பட்டன. அவற்றுள் முதல் நகர அரசாக அமைந்தது காசி ஆகும். இதன் தலைநகர் வாரணாசி ஆகும். இந்த நகரில் பண்டைக்காலத்தில் புகழ்பெற்ற குதிரைச் சந்தை இருந்தது. காஷ்யா எனப்படும் பருத்தி ஆடைக்கு இந்நகரம் சிறப்பு பெற்றிருந்தது.

அடுத்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற நூலாசிரியர்கள் தொடர்பான மற்றொரு செய்தியினைப் பார்ப்போம்.

உலகளவில் உயர்ந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான அமெரிக்காவின் PEN அமைப்பு வழங்கும் சர்வதேச இலக்கிய சேவை விருதுக்கு ஜே.கே.ரெüலிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் HARRY POTTER என்ற நூலினை எழுதியவர்.

ரெüலிங் இந்த விருதினைப்பெறும் நான்காவது நபர் ஆவார். இதற்கு முன் இவ்விருதினை டோனி மோரிசன், சல்மான் ருஸ்டி மற்றும் டிம் ஸ்டாபேட் ஆகியோர் பெற்றுள்ளனர்.ஆதலால் இவ்வாசிரியர்கள் எழுதிய நூல்கள் பற்றி தேர்வு நோக்கில் குறிப்புகள் தயாரித்துக் கொள்ளலாம்.

பெண் தேர்வர் ஒருவர் குடிமைப்பணித்தேர்வில் போராடி வெற்றி முத்திரை பதித்தது பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.