மனித வாழ்வில் அளவில்லாத சுவாரஸ்யங்களில் கனவும் ஒன்று. "நல்ல தூக்கம், அப்போ ஒரு கனவு' என்று அடுத்த முறை யாரும் சொன்னால் நம்பாதீர்கள். கனவுகள் வருவது ஆழ் தூக்கத்துக்கு முன் நிலையில்தானாம். லேசாகத் தூக்கம் கண்ணைச் சுழற்றும் நேரம், தூக்கத்தை REM (ரேபிட் ஐ மூவ்மெண்ட்) நிலை என்கிறார்கள். மூடிய விழித்திரையினுள் கருவிழி அசையும் நிலை. இந்த நிலையில்தான் கனவுகள் வருகின்றன. அடுத்த கட்டமான NON REM என்ற நிலைக்குப் போனால் கருவிழியும் அசைவதில்லை, கனவும் வருவதில்லை. அப்போது அலாரம் அடித்தால் ஆத்திரத்தில் ஓங்கி அதன் தலையில் தட்டிவிட்டு உடனே தூக்கத்திற்குத் திரும்புகிறோம்.
"கனவுகள் ஆழ்மனத்தின் ஆசைகள்' என்று ஃபிராய்ட் போன்ற உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்களாம்.
என்ன கொடுமை சார்! பாதி தோசையைத் தின்று கொண்டே ரயிலின் பின்னே ஓட என்றைக்கு என் ஆழ்மனம் ஆசைப்பட்டிருக்கும்? இன்னொரு விஷயம்... நாம் இதுவரை கண்டேயிராத ஒரு காட்சி நம் கனவில் வரவே முடியாதாம். கண்ட பொருட்கள் வேறு கோணங்களில், வேறு இடங்களில் இருப்பது போல் கனவுகள் வரலாமே அன்றி, இதுவரை காணாதது கனவில் வரவே வராதாம். பிறவியிலேயே பார்வை அற்றவர்களுக்கு கனவுகள் குரல்கள்தானாம். காட்சிகள் அன்று.
இலக்கியங்களிலும் இந்திய சினிமாக்களிலும் கனவு ஒரு முக்கியமான உத்தி. கதாநாயகன் கோடம்பாக்க ஸ்டூடியோவில் மூட்டை தூக்கிவிட்டு, கதாநாயகியைப் பார்த்தவுடன் இருவரும் அடுத்த காட்சியில் கனவு கண்டு ஆம்ஸ்டர்டாம் வென்லோவின் டியூலிப் மலர்த் தோட்டத்துக்குப் போய்விடலாம்!
பாரதி பாஸ்கர் எழுதிய "சிறகை விரி, பற!' என்ற நூலிலிருந்து...