மிச்சமெல்லாம் உச்சம் தொடு - 70: வரும் முன் காப்பது அறிவுடமை, வந்த பின் யோசிப்பது பேதமை! - 70

அவசர கதியில் ஒவ்வோர் அறிகுறிக்கும் சிகிச்சை யளிப்பதை விட்டுவிட்டு, அனைத்து அறிகுறிகளையும் உடல் பரிசோதனை ஆய்வகத் தரவுகளையும்
மிச்சமெல்லாம்   உச்சம் தொடு - 70: வரும் முன் காப்பது அறிவுடமை, வந்த பின் யோசிப்பது பேதமை! - 70


அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில், இறக்கும் தறுவாயில் இருந்த    டாம் என்ற நோயாளியின் மோசமான அனுபவம் பற்றி டாக்டர் டேவிட் ஏ. ஷேவிட்ஸ் என்பவர் எழுதியது ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் போன்றது.  டாம் இறப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு அவரை ஒருங்கிணைந்த
இதய-கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை  மூலம் காப்பாற்ற முடியும் என்ற சிறிய நம்பிக்கையுடன் அவரை  டேவிடின் மருத்துவமனைக்கு மாற்றினார்கள். மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான நன்கொடை உறுப்புகள் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில்  புத்துயிர் தரும் மருத்துவர்களின் நல்ல முயற்சியில் தோல்வியடைந்து அவர் இறந்துவிட்டார்.

ஆனால், அவரது இறப்பு, மருத்துவத் தொழில்நுட்பத் தோல்விகளின் காரணமாக நிகழவில்லை.  மாறாக, சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர், அவருக்கு முதன்முறையாக அறிகுறிகள் தோன்றியபோது, அவற்றின் அடிப்படைக் காரணத்தைத் தேட யாரும் நினைக்கவில்லை. தனது 30 வயதின் முற்பகுதியில்  மூட்டுகளில் வலி ஏற்பட்டது  அவரது முதல் அறிகுறி.  டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டுக்கு சிகிச்சையும், கீல்வாதத்திற்கான அழற்சி எதிர்ப்பு மருந்துகளும் அவருக்குத் தரப்பட்டன.   இழந்த உடல்சார்ந்த   ஆர்வம் அவருக்குத் திரும்பியது.   அவரது மூட்டு வலிகள் குறைந்தன; மருந்துகள் வேலை செய்வதாக ஒரு தோற்றம் உருவாகியது.

ஆண்டுகள் செல்லச் செல்ல, அவரது தோல் கருமையாகியது; அது ஒரு வேளை சூரிய ஒளியின் கடுமை என்று கருதப்பட்டது.  பிரச்னைகள் ஒன்றன் பின் ஒன்றாக  தலை தூக்க ஆரம்பித்தன.  உடற்பயிற்சி செய்வது கடினமாகி
விட்டது. அடிவயிறு வீங்க ஆரம்பித்தது.  சிறு நடைப்பயிற்சி கூட செய்ய முடியாமல் சுவாசத்தில் ஏற்பட்ட சிரமத்துடன், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.  அவரது நிலை ஹீமோக்ரோமாடோசிஸ் (Hemochromatosis) என கண்டறியப்பட்டது.  அதாவது உடலின் வெவ்வேறு பகுதிகளில் இரும்புச் சத்து தேவைக்கு அதிகமாக கூடி மிகுதியாகத் தங்கிவிடுவது.  பிட்யூட்டரி சுரப்பியில் குவிந்தால் டெஸ்டோஸ்டிரோன் அளவைப் பாதிக்கிறது; மூட்டுகளில் குவிந்தால் கீல்வாதத்திற்கு வழிவகுக்கிறது; சருமத்தில் குவிந்தால் தோலின் நிறத்தைக் கருமையாக்குகிறது.  மிகுதியாகவே குவிந்த இரும்புச் சத்து, இதயத்திற்கும் கல்லீரலுக்கும் விஷமாக  மாறுகிறது. அவற்றின் செயல்பாட்டைப் பாதிக்கிறது.  

அவரது இதயத்தால், உடலுக்குத் தேவையான இரத்தத்தைச் செலுத்த முடியவில்லை;  அவரது கல்லீரல் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மையை இழந்து விட்டது.  இரத்த உறைவுக்குத் தேவையான காரணிகளை உருவாக்கவும் முடியவில்லை.  அவர் உடலில் பல இடங்களில் இரத்தப்போக்கு ஏற்பட்டது.   இந்த இரும்பு சத்து கூடியதுதான் இவருடைய நோயின் மூல காரணம் என்பதை உணர்ந்திருந்தால், இந்த நோய்க்கான மருத்துவச் சிகிச்சை மிகப் பழமையானது: வாரம் ஒருமுறை இரத்தத்தை உடம்பிலிருந்து எடுக்க வேண்டும். அதற்கு பெயர் ஃபிளெபோடோமி.  வாரந்தோறும் குறிப்பிட்ட அளவு இரத்தத்தை நீக்குவதால் அதிகப்படியான இரும்பு உடம்பில் சேராமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும் இந்த சிகிச்சை ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டால், நோய் குணமாகவும் வாய்ப்புகள் உள்ளன. 

ஓர் ஆரோக்கியமான இளைஞனுக்கு திடீரென்று குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு மற்றும் கீல்வாதம் ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தால், அவர் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கலாம்.   "இந்த அறிகுறிக்கு இந்த மருந்து'  என்பது  சிறந்த மருத்துவம் அல்ல. "பொட்டாசியம் குறைவா? பொட்டாசியம் சப்ளிமெண்ட்ஸ் கொடுங்கள்.   வயிறு வலிக்கிறதா? ஆன்டாசிட் எடுங்கள்.  மனச்சோர்வா? புரோசாக் (Prozac) எடுத்துக் கொள்ளுங்கள்' என்று மருந்தை கூகுளில் பார்த்து விட்டு நாமே மருந்துக் கடைக்குப் போய் வாங்கிச் சாப்பிடுகிறோம். இல்லையென்றால் சில மருத்துவர்கள் எதையும் பார்க்காமல் அறிகுறிகளுக்கு மருந்து கொடுத்து இல்லையென்றால் ஊசி போட்டு அனுப்பிவிடுகிறார்கள். நாமும் வலி குறைந்தால் இவர் கைராசிக்காரர், மருந்து கொடுத்தால் உடனடி நிவாரணம் என்று மூலத்தை மறந்து நம்மை மரணத்தின் வாசலுக்குத் தயார்ப்படுத்துகிறோம்.   

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் பெரும்பாலும் அறிகுறிகளைப் போக்குகின்றன மற்றும் உடல் பரிசோதனை ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிக்கப்படும் குறைபாடுகளைச் சரி செய்கின்றன. நோயாளிகள் பெரும்பாலும் மருத்துவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் "விரைவு திருத்தம்' (Quick Fix) - இரண்டு ஆய்வக சோதனைகள் மற்றும் அறிகுறிகளைச் சரி செய்ய ஒரு மருந்து இவற்றைத்தான் மக்களும் விரும்புகிறார்கள்.

அறிகுறி அல்லது அறிகுறிகளின் தொகுப்பு ஆகியன எந்த நோயினால் தோன்றின என்பதை  ஆராய்வது மருத்துவர்களின் அடிப்படைப் பொறுப்பாகும்.  மேலும் நோயாளிகளிடம் அறிகுறிகளைக் கேட்டவுடன், ஆராயாமல் உடனே வேகமாக மருந்து கொடுத்து வெளியில் அனுப்பும் வழக்கத்திலிருந்து மருத்துவர்கள் மாற வேண்டும். அறிகுறிகளை ஆயுதமாகக் கொண்டு நோயைப் பார்க்க வேண்டும்.  அறிகுறிகள் நோய்களைப் பார்க்க உதவும் கண்களே.  கண்களை மூடி மறைப்பதற்கு அல்ல சிகிச்சை. அதன் மூலம் நோயைக் குணப்படுத்துவதாக அமைய வேண்டும். 

அவசர கதியில் ஒவ்வோர் அறிகுறிக்கும் சிகிச்சை யளிப்பதை விட்டுவிட்டு, அனைத்து அறிகுறிகளையும் உடல் பரிசோதனை ஆய்வகத் தரவுகளையும் ஆராய்ந்து, நோய் மற்றும் நோய்க்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, நோயை அதன் அடித்தளத்திலிருந்து அகற்ற, விரிவான மருத்துவ ஆய்வு மிகவும் அவசியம்.  இன்னும் ஒரு படிமேலே சென்று, நோய் தடுப்பு முயற்சிகளுடன், நோய் எதிர்ப்பு மண்டலத்தையும்  தயார்ப்படுத்தி, நோயே முதற்கட்டத்தில் வராமல் தடுப்பதற்கான தொடர் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.

அறிகுறிகளுக்குச் சிகிச்சை செய்வதே, நோயின் அடையாளங்களையும், அறிகுறிகளையும் கட்டுப்படுத்தி, விரைந்து அவற்றிலிருந்து விடுதலையும், வலிகளிலிருந்து ஆறுதலும் தருவதுதான்.  ஆனால், இந்த அவசரச் சிகிச்சையில் விட்டுப்போவது என்ன தெரியுமா?  உடம்புக்குள்ளே வேரூன்றி வளர்ந்து 
விசுவரூபமெடுத்துக்கொண்டிருக்கும் நோயையும், அதன் மூலகாரணத்தையும்தான்.  பல நோய்களில், நோய்க்கான காரணங்கள் தெரிந்தும்கூட (எ.கா: இன்ஃப்ளூயன்ஸா உட்பட பல வைரஸ் நோய்கள்), அறிகுறிக்கான சிகிச்சை மட்டுமே இருக்கிறது.  காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் ஆன்டி-பைரெடிக்ஸ் (Anti-pyretices) ஒவ்வாமைக்கான ஆன்டி-ஹிஸ்டமினிக்ஸ் (Anti-histaminics), anti-inflammatory agents, வலி நிவாரணி (analgecis) மருந்துகள் ஆகியவை அறிகுறி சிகிச்சைகளில் அடங்கும்.

அறிகுறிக்கான சிகிச்சையானது, சில நேரங்களில் ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஏனெனில் இது நோயையும் நோயின் காரணத்தையும் கவனத்திலிருந்து மறைத்துவிடுவதால், உடம்பில் வேர் கொண்டிருக்கின்ற நோய் தீர்க்கப்படாமலே  மறக்கப்பட்டு விடும். பிறகு, நாள்பட்ட  நோயாக மாறி தீர்க்க முடியாமலே ஆபத்தாக மாறிவிடும்.  

இரண்டு மூன்று வாரங்களுக்கு காய்ச்சல் என்பது ஸ்டாப் பாக்டீரியாவால் உருவாகும் பாக்டீரிமியாவின் ஒரே அறிகுறியாகும்.  ஸ்டாப் பாக்டீரியா ஒரு நபரின் இரத்த ஓட்டத்தில் நுழையும் போது பாக்டீரிமியா என்கிற தொற்று நோய் ஏற்படுகிறது.  அறிகுறி சிகிச்சையானது,  நோயைக் கண்டுபிடிக்க மறைமுகத் தடையாக இருந்து, நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சைக்கான வாய்ப்பையும் இழக்க வைக்கும்.  இது நெஃப்ரிடிஸ், வாத நோய் மற்றும் எண்டோகார்டிடிஸ் போன்ற கடுமையான விளைவுகளுக்குள் தள்ளிவிடும்.

நாள்பட்ட தலைவலி வெறுமனே உடம்பின் சாதாரணத் தன்மைகளால் அல்லது மூளைக் கட்டி அல்லது மூளை அனீரிசிம் (தமனி சுவரின் பலவீனம் காரணமாக ஏற்படும் தமனி விரிவாக்கம்) போன்ற காரணங்களால் ஏற்படலாம். தலைவலியைத் தணிப்பதற்கான வழக்கமான சிகிச்சைகள் மூலம், மிகவும் ஆபத்தான நோய் உடலில் தங்குவது மட்டுமல்லாமல், ஒரு மோசமான இறப்புக் கட்டத்தை நோக்கிப் பயணம் செய்வதை அறியாமல் போய்விடுவோம்.

மேலும், அறிகுறி சிகிச்சையிலும் பாதகமான விளைவுகளுக்குப் பாதைகள் உண்டு. மேலும் ஒவ்வாமை எதிர்வினைகள், வயிற்று இரத்தப்போக்கு, மத்திய நரம்பு மண்டல விளைவுகள் (குமட்டல், தலைச்சுற்றல் போன்றவை) போன்ற ஈட்ரோஜெனிக் விளைவுகளுக்கு (அதாவது, அறிகுறி சிகிச்சையால் ஏற்படும் தீய விளைவுகள்) ஒரு காரணமாக இருக்கலாம்.  கதிர்வீச்சு மற்றும் வேதிப்பொருள் சிகிச்சை முறைகளினால் ஏற்படும் தலை முடி இழப்பு, வாந்தி, மூளைபாதிப்பு, இரத்த சோகை, குழந்தையின்மை என்று பல விளைவுகளைச் சொல்லலாம்.

புரோஜீரியா (Progeria) என்பது ஒரு மரபு ரீதியான கோளாறு. இது சில நேரங்களில் இளம் வயதிலேயே மரணத்திற்கு வழிவகுக்கிறது.  இந்த நோயைக் குணமாக்க எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் மிகக் குறைந்த அளவு நோயின் கடுமைகளைச் சமாளிக்கும் சிகிச்சைகள் மட்டுமே உள்ளன. போலியோ வருமுன் தடுக்க ஒரு தடுப்பூசி இருக்கிறது, ஆனால், போலியோ வந்துவிட்டால், அதற்கு எந்தச் சிகிச்சையும் இல்லை.

ஒன்றிரண்டு நோய்கள் மட்டும் அல்ல, தற்போதைய மருத்துவ முறையால் குணப்படுத்த முடியாத நோய்கள் ஏராளம்.  ஆனால் அறிகுறிகளையும் கடுமையான தன்மைகளையும் சமாளிக்கும் சிகிச்சைகள் மட்டுமே 
உள்ளன:  நீரிழிவு, ஆஸ்துமா, கால்}கை வலிப்பு, ஒவ்வாமை, போதைக்கு அடிமையாதல், புற்றுநோய், ஆர்த்ரிடிஸ், ஆட்டிசம், நுரையீரல் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய், காது கேளாமை, நுரையீரல் இழைநார்ச்சி, லுகேமியா, உடல் பருமன், ஆஸ்டியோபோரோசிஸ், பார்கின்சன் நோய், தடிப்புத் தோல் அழற்சி, போலியோ, மரபணு நோய், ஹெபடைடிஸ் பி, எச்.ஐ.வி / எய்ட்ஸ், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, பல முடுக்கம், ரேபிஸ், 
ஸ்கிசோஃப்ரினேட்டிவ் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும் நோயைக் குணமாக்கும் சிகிச்சையில், குறிப்பிட்ட நோய் உடம்பிலிருந்து நீக்கப்படும்.  நவீன மருத்துவத்தில், சில நோய்களை மட்டுமே குணப்படுத்த முடியும்.  ஹெபடைடிஸ் பி போன்ற மற்ற நோய்களைக் குணப்படுத்தும் எந்த சிகிச்சையும் இல்லை.  பல நேரங்களில் நோய் கண்ட நபருக்கு எப்போதும் நோய் நிலை இருக்கும். ஆனால் மருத்துவச் சிகிச்சைகள் நோயின் தீவிரத்தன்மையிலிருந்து மட்டுமே பாதுகாக்கும்.  

எனவே வருமுன் காப்பது தான் அறிவுடமை, வந்த பின் யோசிப்பது பேதமை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு கீழ்கண்ட நிலைகளை நாம் புரிந்து, உணர்ந்து நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும். 

நிலை 1:  (EVOLVE ROBUST IMMUNE SYSTEM) சரியான நேரத்தில், அளவான, ஆரோக்கியமான உணவு, தினமும் உடற்பயிற்சி, தினமும் இரவு 9}10 மணிக்குமேல் 8 மணிநேரம் சரியான தூக்கம், மற்றும் தவறான வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாகக் கட்டமைத்து நோய்களிலிருந்து தப்பிக்க, விடுபட உங்கள் உடல், மனநல ஆரோக்கியத்தை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.  

உடலின் இயக்கவியலுடன் இணைந்த வாழ்க்கை முறை, மற்றும் ஆரோக்கியமான உடல் மற்றும் மனம் இவற்றின் மூலம் ஒரு வலுவான திறன்மிக்க நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவது ஒருமித்த இலக்காக இருக்க வேண்டும். திருவள்ளுவர், மருந்தே இல்லாத வாழ்வையும், அதற்கான வழியாக  

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்' குறள்: 942 என்று கூறியிருக்கிறார். 

நிலை 2:  தடுப்பது (PREVENTION). 
வெளிப்புற மருந்துகளின் ஆதரவு மூலம் அதாவது நவீன தடுப்பூசிகள், இயற்கையான இந்திய உணவுப் பழக்க வழக்கம் மற்றும் பாரம்பரிய சித்தா, ஆயுர்வேத மூலிகை மருந்துகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று கிருமி நோய் தொற்று வருமுன் நம்மைப் பாதுகாக்க வேண்டும். அப்படியே வந்தாலும் அதை தடுப்பதற்கு நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.  

நிலை 3:    நோய் வந்த பிறகு அல்லது நோயை முற்றிலும் குணமாக்க (CURE) கூடிய மருந்துகளைக் கொடுக்கும் மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் நவீன மருத்துவ அறுவைச் சிகிச்சைகளைப் பெற்று நோயிலிருந்து, விபத்திலிருந்து, அவசர சிகிச்சையிலிருந்து முற்றிலும் குணமாகுதல்.  

நிலை 4:   நோயைக் குணப்படுத்த முடியவில்லை என்றால் குறைந்தது நோயின் அறிகுறிகளையோ, நிலைமைகளையோ சோதித்து,  நோயுடன் சமாளித்து நவீன மருந்துகள் மூலமும், மருத்துவச் சிகிச்சை மூலம் (TREATMENT) அல்லது மாற்று மருத்துவத்தின் மூலமும் அதை கட்டுக்குள் வைத்து வாழ வேண்டிய நிலையை நாம் அடைகிறோம்.  

இந்த நான்கு நிலைகளில் எந்த வாழ்க்கை முறைகள், மருத்துவ முறைகள் அதாவது, நவீன அலோபதி மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, இயற்கை வைத்தியம், அக்கு பிரஷர், அக்கு பங்சர், 
வர்மம், பஞ்சபூத மருத்துவம் போன்ற மருந்துவ முறைகள் எந்த நிலைகளில் நம்மை ஆரோக்கியமாக வைக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்வது ஆரோக்கியமான வாழ்வைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.  

எந்த நிலையில் நோயைத் தடுக்க முடியும்; எந்த நிலையில் நோயைக் குணமாக்க முடியும்;  எந்த நிலையில் நோயின் அறிகுறி மட்டும் குணமாகும்; ஆனால் நோய் மறைமுகமாக இருக்கும்; அதை மருந்துகளுடன், வாழ்க்கை முறைகளுடன், நடை, உடற்பயிற்சி, யோகாசனம், தியானம் போன்ற வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்து  வாழக் கற்றுக் கொள்ள  வேண்டும். இதுதான் ஆரோக்கியமான வாழ்வைக் கட்டமைக்கும் அடிப்படையாகும்.  

இந்த அனைத்து நிலைகளும் வரிசையாகத்தான் நம் வாழ்வில் வரும் என்றால் அப்படியில்லை. முதல் நிலையை நீங்கள் பலப்படுத்தினால் அடுத்த மூன்று நிலைகளும் வராமல் தவிர்க்கலாம். இரண்டாவது நிலைக்கு உங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டீர்கள் என்றாலும் 3-வது, 4-வது நிலைக்குச் செல்லாமல் தடுக்கலாம்.  எனவே ஆரோக்கியமான வாழ்வை நாம் நமது குழந்தைகளுக்கு இளம் பருவத்தில் இருந்து வாழ்ந்து காட்டி வழிகாட்டவேண்டும். "இதைச் செய், அதைச் செய்' என்று சொன்னால் செய்ய மாட்டார்கள்.  இந்த  கரோனா  கிருமி நோய் தொற்று நம்மை 60 நாட்களாக ஊரடங்கில் வைத்து நமக்கு இதை கற்றுக் கொடுத்து விட்டால் மிகவும் நன்மைதான். அடுத்து என்ன, தொடர்ந்து பார்ப்போம். 


உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்: vponraj@live.com  
 (தொடரும்) 

(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com