ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, மருத்துவக்காப்பீடு என ஏகப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் வந்துவிட்டன. அரசின் எல்ஐசி மட்டுமல்லாமல், பல தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இப்போது வந்துவிட்டன. வெளிநாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களும் செயல்படுகின்றன. இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வேலை செய்வதற்கு உரிய கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
இன்சூரன்ஸ் பிரிவில் இளங்கலைப் பட்டப் படிப்புகள், டிப்ளோமா மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகள், எம்பிஏ, முதுகலைப் பட்டப் படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன.
இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முகவர் பணி செய்ய அதற்கான சான்றிதழ் படிப்புகள் உள்ளன. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வேலைக்குச் சேர அதற்காக பயிற்சி தரும் நிறுவனங்களும் உள்ளன.
டிப்ளோமா இன் இன்சூரன்ஸ் அண்ட் ரிஸ்க் மேனேஜ்மென்ட் என்ற படிப்பு தமிழ்நாடு கவுன்சில் ஃபார் ஓபன் அண்ட் டிஸ்டன்ஸ் லேர்னிங் நிறுவனத்தில் கற்றுத் தரப்படுகிறது.
எம்பிஏ இன் இன்சூரன்ஸ் அண்ட் பேங்கிங் படிப்பு கர்நாடகா ஸ்டேட் ஓபன் யுனிவர்சிட்டியில் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனில் "ஷர்டிபிகேட் புரொகிராம் இன் பேங்கிங் பைனான்ஸ் சர்வீசஸ் அண்ட் இன்சூரன்ஸ் (அட்வான்ஸ் பிஎஃப்எஸ்ஐ) என்ற படிப்பு கற்றுத் தரப்படுகிறது.
இது மதுரையிலுள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியிலும், கோயம்புத்தூரில் உள்ள எஸ்.என்.ஆர். சன்ஸ் காலேஜிலும், தூத்துக்குடியிலுள்ள வாவு வஜீஹா மகளிர் கலை அறிவியல் கல்லூரியிலும், திருநெல்வேலியிலுள்ள சாராள் தக்கர் கல்லூரியிலும் கற்றுத் தரப்படுகிறது.
எம்எஸ்சி இன் ஆக்சூரியல் சயின்ஸ் (இன்ஸ்சூரன்ஸ்) படிப்பு மற்றும் டிப்ளோமா இன் இன்சூரன்ஸ் படிப்பு சென்னைப் பல்கலைக்கழகத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் கற்றுத் தரப்படுகிறது.
பி.ஜி.டிப்ளோமா இன் இன்சூரன்ஸ் படிப்பு,
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும், அழகப்பா பல்கலைக்கழகத்திலும் வழங்கப்படுகிறது.
பி.காம் பேங்கிங் அண்ட் இன்சூரன்ஸ் மூன்று ஆண்டு பட்டப்படிப்புகளும் சொல்லித் தரப்படுகின்றன.