தமிழகத்தைச் சேர்ந்த வள்ளியம்மை கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் - சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலத்தை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறினார்.
வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992-ம் ஆண்டு சட்டக்கல்வியை வள்ளியம்மை முடித்தார். அதன்பின் அவர், 1995-ம் ஆண்டு முதல் வழக்கறிஞர் பணியைத் தொடங்கி பல்வேறு வழக்குகளைத் திறம்படக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.
வழக்கறிஞர் தொழிலுடன் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், சைமன் பிரேசர் பல்கலைக்கழகம், வான்கூவர் கம்யூனிட்டி கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் இவர் சட்டக்கல்வியைப் பயிற்றுவித்துள்ளார். இவருடைய சேவையைப் பாராட்டி பல்வேறு நிறுவனங்கள் விருதுகளை வழங்கி உள்ளன. இந்தியா-கனடா வியாபார அமைப்பின் தலைவராகவும், தேசிய அமைப்பின் இயக்குநராகவும் பணியாற்றி இரு நாடுகளின் வர்த்தக உறவை மேம்பட செய்துள்ளார் வள்ளியம்மை.
பிரிட்டிஷ் கொலம்பியா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக வள்ளியம்மை நியமிக்கப்பட்டதன் மூலம், தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ள இவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர்.