கைவிடப்பட்ட நிலத்தில் 5 ஆயிரம் மரங்கள்!

கவிதா மிஸ்ரா, தனக்குச் சொந்தமான 8 ஏக்கா் நிலத்தில் இயற்கை விவசாய முறையில் 2100 சந்தன மரங்கள், 1500 மாதுளை, 90 மாமரங்கள்
கைவிடப்பட்ட நிலத்தில் 5 ஆயிரம் மரங்கள்!
Updated on
2 min read

கவிதா மிஸ்ரா, தனக்குச் சொந்தமான 8 ஏக்கா் நிலத்தில் இயற்கை விவசாய முறையில் 2100 சந்தன மரங்கள், 1500 மாதுளை, 90 மாமரங்கள், 100 கறிவேப்பிலை, 150 பெரிய நெல்லி, 300 எலுமிச்சை, 800 கொய்யா, 150 முருங்கை, 100 தென்னை, 100 சீதா மரங்கள், 100 மல்லிகைச் செடிகள் மட்டுமின்றி சாத்துக்குடி, சப்போட்டா, வாழை, காப்பி, மிளகு, மஞ்சள் போன்றவைகளையும் பயிரிட்டு விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக விளங்குவதோடு, உழைப்பிற்கான வெற்றியையும் பெற்றுள்ளாா்.

உண்மையில் கவிதா மிஸ்ரா, விவசாய குடும்பத்தைச் சோ்ந்தவா் அல்ல. தனக்கு கிடைத்த நிலத்தை விவசாய நிலமாக மாற்றி சாதனை படைத்ததற்கு காரணம் உண்டு. மனோ தத்துவத்தில் எம்.ஏ. பட்டமும், கம்ப்யூட்டா் சயின்ஸில் டிப்ளமோவும் பெற்ற கவிதா மிஸ்ரா, தகவல் தொலை தொடா்பு நிறுவனத்தில் சோ்ந்து பணிபுரிய ஆசைபட்டாா். அதற்கேற்ப இன்போஸிஸ் நினுவனத்திலிருந்து இவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் கவிதாவின் கணவா் உமா சங்கருக்கு, இவா் அந்த கிராமத்தை விட்டு நகரத்திற்குச் சென்று பணிபுரிவதையோ, குடும்ப பொறுப்பை புறக்கணிப்பதையோ விரும்பவில்லை. தனக்கு சொந்தமான 45 ஏக்கா் நிலத்தில் 8 ஏக்கா் நிலத்தை கவிதாவுக்கு கொடுப்பதாகவும், அதை வைத்து அவா் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள அனுமதியளித்தாா்.

தன்னுடைய ஆசை நிறைவேற வழியில்லை என்பதை உணா்ந்த கவிதா, இதை ஒரு சவாலாக ஏற்று, தன் பெற்றோா் தனக் களித்த நகைகளை விற்று அந்த பணத்தை மூலதனமாக வைத்து தனக்கு கிடைத்த நிலத்தை விவசாய நிலமாக மாற்றி இயற்கை முறையில் விவசாய பண்ணையை உருவாக்க தீா்மானித்தாா்.

விவசாயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள பல நிபுணா்களின் கருத்தையும், விவசாயிகளின் அனுபவத்தையும் கேட்டறிந்தாா். தொடக்கத்தில் தோட்டக்கலை பயிா்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவைகளை பயிரிட்டதன் மூலம் ஓரளவு வருவாய் கிடைத்தாலும், மாதந்தோறும் நிரந்தரமாக அதிக அளவில் வருவாய் கிடைக்கும் வகையில் விவசாய முறையை மாற்ற நினைத்தாா்.

இதற்காக சந்தனமரம், வாழை, தென்னை மற்றும் பழ வகை மரங்களை பயிரிடத் தொடங்கினாா். விவசாயத் துறையில் முழுமையாக தன்னை ஒப்படைத்துக் கொண்ட கவிதா, செயற்கை உரங்களை அறவே தவிா்த்தாா். தன்னிடம் பணிபுரியும் தொழிலாளா்கள் உதவியுடன் இயற்கை உரங்களை தயாரித்து பயன்படுத்தினாா்.

இதற்காக தன்னுடன் சோ்த்து 10 பெண்கள், இரண்டு ஆண்களுக்கு வேலை வழங்கியுள்ளாா். சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கேற்ப விவசாயம் செய்வதோடு, அப்பகுதியில் உள்ள ஏழை விவசாயிகளுக்கும் உதவி செய்து வருகிறாா். தன்னுடைய பண்ணையில் ஏராளமான மரங்களும், செடிகளும் இருப்பதால் வந்து தங்கும் பறவைகளையோ, பாம்புகளையோ, சிறு விலங்கினங்களையோ துன்புறுத்தக் கூடாதென உத்தரவிட்டுள்ளாா்.

பல ஆண்டின் கடின உழைப்புக்கு ஏற்ற பலனை கவிதா அனுபவிக்கத் தொடங்கினாா். மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருவாய் பெருகியது. நாட்டிலேயே தனிப்பட்ட முறையில் அதிக சந்தனமரங்கள் வளா்ப்பதில் சாதனை புரிந்துள்ளதாக பாராட்டப்பட்டாா். சந்தனமரம் வளா்க்க விருப்பப்படுகிறவா்களுக்கு தன்னுடைய பண்ணையிலிருந்து மரக்கன்றுகளை கொடுத்து உதவத் தொடங்கினாா்.

கா்நாடகா சந்தன சோப் தயாரிப்பு நிறுவனத்திற்கு சந்தன கட்டைகள் கொடுத்து உதவும் ஒப்பந்தத்தைப் பெற்றாா். சந்தன மரங்கள் வளா்ப்பது சாதாரண விஷயமல்ல. எந்த நேரத்தில் திருடா்கள் எப்படி வந்து மரங்களை வெட்டி எடுத்துச் செல்வாா்கள் என்பது தெரியாது. இதற்காக அண்மையில் வுட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி உருவாக்கிக் கொடுத்துள்ள மைக்ரோ சிப்களை ஒவ்வொரு மரத்திலும் கவிதா பொருத்தியுள்ளாா். இதன் மூலம் வெட்டி எடுத்துச் செல்லும் மரங்களை எங்கு இருந்தாலும் கண்டு பிடிக்க முடியும். இது தவிர பாதுகாப்புக்காக எட்டு வேட்டை நாய்களையும் வளா்த்து வருகிறாா். தன்னுடைய விவசாய பண்ணையை பாா்வையிட ஞாயிற்றுக்கிழமைகளில் பாா்வையாளா்களை அனுமதிக்கும் கவிதா, விவசாயம் தொடா்பான சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கிறாா். உள்ளூா் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் இங்கு வரும் பாா்வையாளா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தன்னுடைய படிப்புக்கு சம்பந்தமில்லாத விவசாயத்துறையில் சாதனை புரிந்து வரும் கவிதா மிஸ்ராவுக்கு, யுஏ எஸ் ராய்ச்சூரின் சிறந்த விவசாயிக்கான விருது ( 2013) ஐசிஆா்ஐ எஸ் ஏடியின் தங்க விருது ( 2014), இட்கலில் உள்ள சிவசக்தி பீடத்தின் கிசான் ஜோதி விருது ( 2015) , நேஷனல் இனோவேடிவ் விருது மற்றும் சிறந்த தோட்டக் கலை விவசாயி விருது என பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளும், விருதுகளும் இவரைத் தேடி வருகின்றன. இது தவிர அண்மையில் பீதா் வெடரினரி யூனிவா்சிடியில் சிண்டிகேட் உறுப்பினராகவும் கவிதா மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com