

"பெட்டாக்' என்ற பெயரில் பெண்களுக்கு இலவச தற்காப்பு கலையை முன்னெடுத்து கற்றுத் தருகிறார் திருச்சி சாமுத்ரிகா அகாதெமியின் நிர்வாக இயக்குநர் தமிழச்சி பிரியா கோவிந்தராஜ். அவர், நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:
""கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து எனது சாமுத்ரிகா அகாதெமி பயணித்து வருகிறது. அந்தக் காலகட்டத்தில் எங்கள் பகுதியில் பெண்களிடம் செயின் பறிப்பு அதிகரித்து வந்தது. இதை எப்படி தடுக்கலாம், பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள உதவி செய்யலாமே என்ற நோக்கத்தில்தான் "பெட்டாக்' என்ற பெயரில் தற்காப்பு கலை பயிற்சியை தொடங்கினேன். இதன்மூலம், பாலியல் வன்கொடுமையில் உள்ள சட்ட திட்டங்கள் குறித்தும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இப்பயிற்சியினை கரோனா ஊரடங்குக்கு முன்பு திருச்சியில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் பணிபுரியும் 450 பெண்களுக்கு நான்கு கட்டங்களாக தற்காப்புகலையை பயிற்சியை அளித்தோம். அதுபோன்று மகளிர் சங்கங்கள், ஊர்க்காவல் படை, ஹோலி கிராஸ் மற்றும் காவேரி கல்லூரி, பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், சேலத்தில் மூன்று கல்லூரிகளைச் சேர்ந்த 1,500 மாணவிகளுக்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இந்த இலவச பயிற்சியை வழங்கினோம். இது வரை சுமார் ஒன்பது ஆயிரம் பெண்களுக்கும் மேலாக தற்காப்புக் கலைப்பயிற்சியை அளித்துள்ளோம்.
இதைத் தவிர, அகாதெமியில் பரதம், மேற்கத்திய நடனம், சிறந்த கையெழுத்து, அழகுக்கலை, யோகா, கீ.போர்டு, தையல் போன்று சுமார் 25 விதமான பயிற்சிகளும் அளித்து வருகிறோம்.
அது போன்று கொலம்பியா நாட்டின் பீடோ பெர்ஸ் மூலமாக அறிமுகமான உடல் பயிற்சியுடன் கூடிய ஜும்பா நடனத்தை கற்று தேர்ந்து அதற்கான பயிற்சியும் அளித்து வருகிறோம்.
ஒவ்வொரு பயிற்சிகளிலும் திறமை வாய்ந்த பல்வேறு துறைகளில் முனைவர் பட்டம் பெற்ற பயிற்சியாளர்களை கொண்டு பயிற்றுவித்து வருகிறோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.