
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தாயை இழந்து மயிரிழையில் தப்பித்து அநாதைகளான குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க, நான்கு பெண்கள் முன்வந்துள்ளனர்.
கேரள மாநிலத்துக்கு உள்பட்ட வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில் தாய்களோடு குழந்தைகள் மண்ணில் புதைத்தாலும், சிலர் மட்டும் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர். அவர்களுக்கு உடனடி தேவை தாய்ப்பால். குழந்தையின் தேவையை குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்குத்தானே தெரியும். அப்படித் தெரிந்தாலும் எல்லா தாய்மார்களும் பிறர் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட முன்வருவார்களா?
நான்கு மாதப் பெண் குழந்தைக்குத் தாயான பாவனா இடுக்கியைச் சேர்ந்தவர். இவர் நிலச்சரிவைக் கேள்விப்பட்டதும் ஒரு விநாடி கூட தாமதிக்காமல், தனது கணவன், இரண்டு குழந்தைகளுடன் 350 கி.மீ. தூரத்தில் இருக்கும் வயநாட்டுக்கு இரவோடு இரவாகப் புறப்பட்டுச் சென்றார்.
நூற்றுக்கணக்கான மனித உயிர்களை நிலச்சரிவு பலி வாங்கியுள்ளது. இந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்டவுடன், குறிப்பாக தாய்கள் இறந்து உயிர் தப்பிய குழந்தைகள் நினைவுதான் வந்தது. துடிதுடித்துப் போனேன். தாயை இழந்த சிசுக்கள் தாய்ப் பாலுக்காக நிச்சயம் அழுவார்கள். அவர்களுக்குப் பாலூட்டி பசியாற்ற வேண்டும் என்ற தாய் உணர்வுதான் என்னை இடுக்கியிலிருந்து வயநாட்டுக்கு பத்து மணி நேரம் இரவில் சிறு குழந்தைகளுடன் பயணிக்க வைத்தது' என்கிறார் பாவனா.
பாவனா தனது குடும்பத்துடன் வயநாட்டில் மேப்பாடி முகாமில் தங்கி தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு பாலூட்டி வருகிறார்.
வயநாடு பேரிடரில் தாயை இழந்த சிறு குழந்தைகளை தனது மாரோடு அணைத்து தாய்ப்பால் வழங்கியவர் ஷானிபா. இவருக்கு ஐந்து மாத மகளும் இருக்கிறார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பலவித உதவிகள் பல திசைகளிலிருந்து வந்தாலும், தாய்ப்பால் என்பது அரிதாகக் கிடைக்கக் கூடியது. அதை அவசரக் கதியில் சேகரிக்க முடியாது. இந்த நிலைமை உணர்ந்து பாவனா, ஷானிபாவுடன் இன்னும் இரண்டு இளம்தாய்கள் தாய்ப்பால் ஊட்ட இணைந்துள்ளனர். இவர்களுக்கு கேரளத்திலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.