
ஷண்முக சுப்பையா கவிதைகள்
1. செம்மறி ஆடு அம்மா அம்மா அந்தச் செம்மறி ஆடு சும்மா சும்மா முட்டிட வருது. கொம்பின்னும் முளைக்கவில்லை ஆயினும் அதற்கு தெம்பிற்கொரு குறைவுமில்லை. குட்டி ஆடது என்ன பாடு படுத்துது. ஆதலாலே அம்மா நீயே அதன்
1. செம்மறி ஆடு
அம்மா அம்மா
அந்தச் செம்மறி ஆடு
சும்மா சும்மா
முட்டிட வருது.
கொம்பின்னும் முளைக்கவில்லை
ஆயினும் அதற்கு
தெம்பிற்கொரு குறைவுமில்லை.
குட்டி ஆடது
என்ன பாடு படுத்துது.
ஆதலாலே
அம்மா நீயே
அதன் உடையவர் யாரோ
அவரிடம் உடனே
அதைக் கட்டிடச் சொல்லு.
இல்லாவிட்டால்
இனி நான்
போகவே மாட்டேன்
வெளியே!
2. கப்பல்
கால மழை வந்திட
சாலைச் சிறார்
சிலர் கூடி
காகிதக் கப்பல்
பல செய்து
கட்டெறும்பு சிலதைப்
பிடித்தவைதனில் அடைத்து
நீரில் ஒழுகவிட்டு
அவை போகிற போக்கைப் பார்த்து
உவகை மிக்குடையராகி
கூக்குரலிட்டுக்
கூத்தாடினரே!
3. ஆதாரம்
மரமே மரமே
மாமரமே!
நீ
விண்ணை நோக்கி
விரைந்தாலும்
மண்ணே உனக்கு
ஆதாரம்.
மற்றதெலாமே
மறுபட்சம்.
4. அழகு
குழந்தை:
வண்ண வண்ண மலரிலெல்லாம்
வந்தமரும்
வண்ணத்துப்பூச்சி
உன் பட்டு மேனியைத்
தொட்டுப் பார்க்க
ஒட்டி வந்தால்
எட்டிப் போவதேன்
வண்ணத்துப்பூச்சி!
வண்ணத்துப்பூச்சி:
புழுதியான புழுதியெல்லாம்
அளைந்துவரும்
குழந்தையே
உன் அருமந்தக் கரங்களால்
என் உருவையே மாற்றிடுவாய்
ஒருவேளை
என் உயிரையே எடுத்திடுவாய்
ஆதலாலே
என் அருமந்தக் குழந்தையே
என்னை நீ
எட்டி நின்றே பார்த்திடுவாய்
என் அழகையெல்லாம்
பருகிடுவாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





