டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இயற்கையைக் காப்போம்!

மரங்களும் மலையும் காடும்மக்களால் அழிவதாலேவரந்தரும் இயற்கை வாடிவறட்சியால் வதங்கக் கண்டோம்!

News image
Updated On :9 ஆகஸ்ட் 2015, 3:26 pm

தளவை இளங்குமரன்

மரங்களும் மலையும் காடும்

மக்களால் அழிவதாலே

வரந்தரும் இயற்கை வாடி

வறட்சியால் வதங்கக் கண்டோம்!

வனங்களில் வசிக்கும் யானை

வரிப்புலி இரையைத் தேடி

மனிதர்கள் வசிக்கும் ஊருள்

வந்திடர் விளைக்கக் கண்டோம்!

கழனிகள் மறைந்து மாடிக்

கட்டிடம் நிறைந்ததாலே

உழுதொழில் குறைந்து பல்லோர்

ஊர்மாறிப் போகக் கண்டோம்!

தொழில் வளம் பெருகி ஆலை

தொடர்ந்துமே வெளியில் போக்கும்

கழிவுநீர் குடிநீ ரோடு

கலந்து நோய் பரவக் கண்டோம்!

வாகன வசதி நாளும்

வளர்ந்தோங்கிக் கரி புகையால்

ஆகாயம் காற்று மாசு

அடைந்தோசோன் கிழியக் கண்டோம்!

உருவான ஓசோன் படல

ஓட்டையில் வழியாய்ப் பாயும்

புற ஊதாக் கதிர்க ளாலே

புவி வெப்பம் உயரக் கண்டோம்!

நெகிழிப்பை மழையின் நீரை

நிலத்தினுள் புகாது மூடி

அகிலத்தைக் குப்பை மேடாய்

ஆக்கிடும் கொடுமை கண்டோம்!

செயற்கை விண் கலங்கள் ஏவிச்

செவ்வாய்க்கும் பாதை கண்டோம்

இயற்கையைப் பாது காத்தே

இன்புறும் வாழ்வைக் காண்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.