கதைப்பாடல்: உண்மை அன்பு வெல்லும்!

காட்டில் மரத்தின் மீதொரு பறவைக் கூடு இருந்ததாம்.
கதைப்பாடல்: உண்மை அன்பு வெல்லும்!
Updated on
1 min read

காட்டில் மரத்தின் மீதொரு

பறவைக் கூடு இருந்ததாம்.

கூட்டுக் குள்ளே குஞ்சுகள்

கூட தாயும் வாழ்ந்ததாம்.

அன்று வனத்தில் திடீரென

அதிகத் தீயும் பிடித்ததாம்

எங்கும் எதுவும் தீயினால்

எரியத் தொடங்கி விட்டதாம்.

கூட்டில் இருந்த குஞ்சுகள்

கொல்லும் நெருப்புச் சூட்டிலே

பட்டிடாமல் காத்திட

பயந்த தாயும் சொன்னதாம்:

""உங்கள் உயிரைக் காத்திட

ஒன்று சொல்வேன் கேளுங்கள்

இங்கு உள்ள எலிப்பொந்துள்

எடுத்து வைப்பேன் உங்களை.

தீயின் வெம்மை தீர்ந்ததும்

திரும்ப வந்து கூட்டுள்ளே

எடுத்து வைத்து விடுகிறேன்''

என்று தாயும் சொன்னதாம்.

தாயைக் காக்க குஞ்சுகள்

தாமும் விருப்பம் கொண்டதால்,

உன்தன் உயிரைக் காத்துக்கொள்

ஓடி விடுவாய் என்றன.

தாயும் வருந்திப் பறந்தது

தாவி நெருப்பு சூழ்ந்தது

தீயைப் பார்த்துத் துணிவுடன்

தீர்க்க மாகக் குஞ்சுகள்:

""எங்கள் அன்புத் தெய்வமே!

எரியும் அக்கினி தேவனே!

உங்கள் அன்பு பிள்ளைஎம்

உயிரைக் காக்க வேணுமே,

எம்மைப் பெற்ற தாயையும்

இரக்கம் கொண்டு காக்கணும்

என்று கேட்டுக் கொண்டதால்

எரிக்க வில்லை நெருப்புமே!

வெம்மை தீர்ந்து ஓய்ந்ததும்

விரைந்து தாயும் வந்ததாம்

கூட்டுக் குஞ்சுகள் தாயினைக்

கொஞ்சிக் கொஞ்சி மகிழ்ந்ததாம்!

உண்மை அன்பு என்றுமே

உலகில் வெல்லும் நம்புங்கள்

நன்மை செய்ய நினைப்பவர்

நலிவ தில்லை உலகிலே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com