

ஓர் ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான். அவன் ஒருநாள் தூங்கி எழுந்ததும் விடியற்காலையில் ஜோடியாக உள்ள காக்கைகளைக் கண்டால் அன்றைக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கேள்விப்பட்டான். தான் ஜோடிக் காக்கைகளைக் காலையில் எழுந்ததும் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டான்.
அவ்வாறு எண்ணம் கொண்ட அப்பணக்காரன் தன் வேலைக்காரனை அழைத்து ""நீ விடியற்காலையில் ஜோடிக் காக்கைகளைப் பார்த்து வந்து என்னை எழுப்பு'' என்று கூறினான்.
அவ்வேலைக்காரன் மறுநாள் விடியற்காலையில் ஓர் இடத்தில் ஜோடிக் காக்கைகள் இருப்பதைப் பார்த்தான். உடனே ஓடிச்சென்று தன் எஜமானனை எழுப்பினான்.
அப்பணக்காரன் படுக்கையிலிருந்து எழுந்து சென்று பார்க்கும்பொழுது அங்கே ஒரு காக்கை மட்டும் இருந்தது. மற்றொரு காக்கை பறந்து போய்விட்டது.
ஒரு காக்கையை மட்டும் பார்த்த பணக்காரன் கோபம்கொண்டு ""மற்றொரு காக்கை பறந்து செல்வதற்கு முன்னால் என்னை வந்து ஏன் எழுப்பவில்லை'' என்று சொல்லிக்கொண்டே வேலைக்காரனை அடித்தான்.
அப்போது அந்த வேலைக்காரன் ""எஜமானனே விடியற்காலையில் ஜோடிக் காக்கைகளைப் பார்த்ததால் எனக்கு உண்டான அதிர்ஷ்டத்தைப் பார்த்தீர்களா? உங்களிடம் அடிவாங்கியதுதான் அதிர்ஷ்டம்'' என்று கூறினான்.
அதைக் கேட்ட பணக்காரன் ""ஆமாம்'' என்று சொல்லி அடிப்பதை நிறுத்தி விட்டான். உண்மை உணர்ந்து அவனிடம் மன்னிப்புக் கேட்டான்.
(""100 குட்டிக்கதைகள்'' என்னும் நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.