

குதிரை ஒன்று வனத்திலே
கோபம் கொண்டு கனைத்ததாம்!
அதிர்ந்து போன விலங்குகள்
அருகில் செல்ல பயந்ததாம்!
சிட்டுக் குருவி மனதிலே
சிறிதும் அச்சம் இன்றியே
கிட்டச் சென்று குதிரைக்கு
கிச்சு கிச்சு மூட்டிச்சாம்!
சிரிப்பு வந்த போதிலும்
சிரிக்கவில்லை குதிரையும்
சிலுப்பிக்கொண்டு குருவியை
விலகிப் போகச் சொல்லிச்சாம்!
தும்பி குதிரை மூக்கினுள்
நுழைந்து வெளியே வந்ததும்
எம்பிக் குதித்து குதிரையோ
எட்டுத் தும்மல் போட்டுச்சாம்!
குரங்கு ஒன்று குதிரைமுன்
குட்டிக் கரணம் போட்டுமே
சிரிக்கவில்லை குதிரையும்
சீ!...சீ!... போடா!...என்றுச்சாம்!
என்னைப் பார்த்தால் சிரிக்கலாம்!
என்று சொல்லி யானையோ
மண்ணை அள்ளித் தலையிலே
போட்டு சிரிப்பு மூட்டுச்சாம்!
என்ன செய்தும் குதிரையோ
எதற்கும் சிரிக்கவில்லையாம்!
காரணத்தைக் கேட்டதும்
கனைத்துக் கொண்டு சொல்லிச்சாம்!
""இளநி மட்டை டயர்களில்
தேங்கும் நீரில் கொசுக்களும்
இட்டு டெங்கு காய்ச்சலை
எளிதாய்ப் பரப்பி வருவதால்....
மனிதர் மீது கோபத்தை
மனதில் தேக்கி வைத்துள்ளேன்....
இனிமேல் அவர்கள் சுத்தமாய்
இருக்க வேண்டும் இல்லையேல்
சிரிக்க மாட்டேன் என்றும் நான்!
உரைக்க வேண்டும் யாவரும்
ஒன்று கூடி யாவர்க்கும்!''
என்று குதிரை சொல்லிச்சாம்!
விலங்கு பறவை பூச்சிகள்
யாவும் ஒன்று கூடியே
முழங்கிச் சொன்ன வாசகம்
என்ன என்று தெரியுமா?
டெங்கு ஒழிக்க யாவரும்
எங்கும் ஒன்று சேருவோம்!
பொங்கிப் புரவி சிரித்திட
தூய்மை தன்னைப் பேணுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.