இந்திய விண்வெளி ஆய்வு மையம்! 

இஸ்ரோ என்றழைக்கப்படும் "இந்திய விண்வெளி ஆய்வு மையம்' இந்திய அரசின் முதன்மையான விண்வெளி ஆராய்ச்சி நிலையமாகும்.
இந்திய விண்வெளி ஆய்வு மையம்! 

கருவூலம்
இந்திய விண்வெளி ஆய்வு மையம்!

(INDIAN SPACE RESEARCH ORGANISATION - ISRO)
இஸ்ரோ என்றழைக்கப்படும் "இந்திய விண்வெளி ஆய்வு மையம்' இந்திய அரசின் முதன்மையான விண்வெளி ஆராய்ச்சி நிலையமாகும். இது ஆகஸ்டு 15, 1969 - இல் நிறுவப்பட்டது. உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆய்வு மையங்களில் இஸ்ரோ ஆறாவதாக உள்ளது. புதிய மேம்பட்ட விண்வெளி தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றை நாட்டு நலனுக்காக பயன்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டது.
நாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கவும், செல்ஃபோனில் பேசவும், இணையம் முதலியவைகளைப் பயன்படுத்தவும் செயற்கைக் கோள்களே (ARTIFICIAL SATELLITES) ஆதாரமாக உள்ளது. மேலும் பூமியைப் பற்றிய ஆராய்ச்சிகள், தட்பவெட்ப நிலை, விவசாயம், அனைத்து வகையான (தரை, வான், கடல்) போக்குவரத்து உள்ளிட்ட பல விஷயங்கள் செயற்கைக் கோள்களின் உதவியுடன்தான் செயல்படுகிறது.
இந்த செயற்கைக் கோள்கள் பூமியை ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதையில் சுற்றிவரும் வகையில் விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்படுகிறது. இவை விண்ணில் ஏவப்பட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலை நிறுத்தப்பட வேண்டும். இதற்கு "ஏவு வாகனம்' (SATELLITE LAUNCHING VEHICLE) எனப்படும் ராக்கெட் (ROCKET) அவசியம். இந்த ஏவு வாகனங்கள்தான் விண்ணில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்துகிறது.
இந்தியாவில் இந்த செயற்கைக் கோள்களையும் ஏவு வாகனங்களையும் வடிவமைத்து, உருவாக்கி விண்ணில் செலுத்துவது, இயக்குவது, கட்டுப்படுத்துவது என அனைத்தையும் செய்வது இஸ்ரோதான்!
இஸ்ரோவின் தோற்றம்!
இந்தியாவின் விண்வெளி ஆய்வு 1920 களில் "சிசிர் குமார் மித்ரா' என்பவரால் தொடங்கியது. அதன்பின் சர்.சி.வி.ராமன், மேக்நாத் சாகா போன்றோர் தனிப்பட்ட முறையில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 1945 - க்குப் பிறகு இம்முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஆய்வு மையங்கள் சில தொடங்கப்பட்டது. இந்த ஆய்வுகளுக்கு "விக்ரம் சாராபாய்' அவர்களும், "ஹோமி ஜஹாங்கீர் பாபா' அவர்களும் முன்னிருந்து வழி நடத்தினார்கள்.
அதன்பின் 1962 - இல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் ஆதரவுடன் விக்ரம் சாராபாய் தலைமையில் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக்கான குழு (NATIONAL COMMITTEE FOR SPACE RESEARCH - INCOSPAR- ) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது! பின்னர் இந்த அமைப்பு மேம்படுத்தப்பட்டு இஸ்ரோ உருவானது. டாக்டர் . விக்ரம் சாராபாய் அவர்களே இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை முன்னெடுத்துச் சென்றார். இவர் "இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை' எனப் புகழப்படுகிறார்!
இஸ்ரோவின் நிர்வாக அமைப்புகள்!

இஸ்ரோவின் பல்வேறு பணிகளுக்காகவும், ஆராய்ச்சிகளுக்காகவும் பெங்களூரு, திருவனந்தபுரம், டெல்லி, ஸ்ரீஹரிகோட்டா, மகேந்திரகிரி (தமிழ்நாடு) உட்பட 21 இடங்களில் இஸ்ரோ மையங்கள் உள்ளது. இது தவிர துணை மையங்கள் பல உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் ஒரு குறிப்பிட்ட திட்டம் குறித்த ஆராய்ச்சிகளும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
இஸ்ரோவின் தலைமையகம், "ஸ்பேஸ் கமிஷன்' எனப்படும் விண்வெளி ஆணையம், துணை மையங்கள் உள்ளிட்ட 11 மையங்கள் பெங்களூருவில்தான் உள்ளது. 
இவை அனைத்திற்கும் தலை போன்றது "ஐசாக்' எனப்படும் இஸ்ரோ சாட்டிலைட் சென்டர். (ISRO SATELLITE CENTRE) 
இங்கிருந்துதான் இந்தியா இதுவரை அனுப்பிய செயற்கைக் கோள்களும், இனிமேல் அனுப்பப்போகும் செயற்கைக் கோள்களும், கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு, வழிநடத்தப்படுகிறது!
41 பில்லியன் ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்ட இஸ்ரோவில் சுமார் 16 ஆயிரம் ஊழியர்கள் பணி புரிகின்றனர்.இது இந்திய விண்வெளித் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது இஸ்ரோவிற்கு "கைலாசவடிவு சிவன்' அவர்கள் தலைவராக உள்ளார்.
சாதனை பயணத்தின் பல படிகள்!
விஞ்ஞானிகளின் விடா முயற்சி, கடின உழைப்பு, மற்றும் திறமையினால் இஸ்ரோ பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 1975 - இல் ஆர்யபட்டா என்ற இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் இஸ்ரோவினால் உருவாக்கப்பட்டது. இது சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் அந்நாட்டிலிருந்து, அவர்களுடைய ஏவு வாகனம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாஸ்கரா, ரோகிணி, கல்பனா, இன்சாட் போன்ற பல செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. 
பூமியை சுற்றும் பல செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டது போல் நிலவினை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் என்ற செயற்கைக்கோள் 2008, அக்டோபர் 22 - இல் விண்ணில் ஏவப்பட்டது. 
மேலும் 2013, நவம்பர் 5 - இல் பெரும் சாதனையான வேற்று கிரக ஆராய்ச்சிக்கான "மங்கள்யான்' என்று செல்லமாக அழைக்கப்படும் (MARS ORBIT MISSION) என்ற செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான செயற்கைக்கோள் அனுப்பப்பட்டு பல ஆய்வுகள் நடத்தப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பிறநாட்டு செயற்கைக்கோள்களும் இஸ்ரோவினால் விண்ணில் செலுத்தப்படுகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றினாலும் 10 நாடுகள்தான் அவற்றை ஏவும் வசதியைப் பெற்றுள்ளது. அவ்வகையில் இஸ்ரோவினால் 2018 நவம்பர் வரை 269-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன! 
ஏவு வாகனம்!
1980 - ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட ஏவு வாகனம் (S.L.V.3 - SATELLITE LAUNCHING VEHICLE) மூலம் ரோஹிணி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது! இது 500 கி.மீ. உயரத்தில் 40 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் திறன் கொண்டது. 
அதன்பின் படிப்படியாக ஏ.எஸ்.எல்.வி. (A.S.L.V.  - AUGMENTED SATELLITE LAUNCH 
VEHICLE) துருவச் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்த உதவும் பி.எஸ்.எல்.வி. (P.S.L.V.  -  POLAR SATELLITE LAUNCHING VEHICLE) என மேம்பட்ட திறன் கொண்ட ஏவு வாகனங்கள் இஸ்ரோவினால் உருவாக்கப்பட்டன. 
பி.எஸ்.எஸ்.வி. ஏவு வாகனம் உருவாக்கும் முயற்சிகள் பல தடைகளைத் தாண்டி 1990 - களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பல தொலைத் தொடர்பு செயற்கைக்கோள்கள் உட்பட 90 செயற்கைக்கோள்கள் டிசம்பர் 2015 - இல் பி.எஸ்.எல்.வி. மூலம் 10 செயற்கைக் கோள்கள் ஒரே சமயத்தில் விண்ணில் ஏவப்பட்டது ஒரு மிகப் பெரிய சாதனையாகும்!
மேலும் 2016 - இல் பி.எஸ்.எல்.வி-சி34, 20 செயற்கைக் கோள்களையும், பி.எஸ்.எல்.வி. சி35, எட்டு செயற்கைக் கோள்களையும், 2017, பிப்ரவரியில், பி.எஸ்.எல்.வி சி37, 104 செயற்கைக்கோள்களையும், அதே வருடம் ஜூனில் பி.எஸ்.எல்.வி 38, 31 செயற்கைக்கோள்களையும் ஒரே சமயத்தில் தாங்கிச் சென்றது என்றால் வியப்பு மேலிடுகிறது அல்லவா? 2019 மே மாதம் பி.எஸ்.எல்.வி 46 ஏவப்பட்டது! இது பூமியின் பருவநிலைகளைக் கண்காணிப்பதற்காக ஏவப்பட்டது! 
வருங்கால திட்டங்கள்! 
✦ அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தும் திறன் மிக்க ஏவுவாகனங்களை உருவாக்குவது
✦ மிண்டும் பயன்படக்கூடிய ஏவுவாகனம் வடிவமைப்பது
✦ மனிதர்கள் விண்ணில் பயணிக்கக்கூடிய விண்கலங்கள் வடிவமைத்து உருவாக்குவது
✦ சூரியனை ஆராய செயற்கைக்கோள் ஒன்று வடிவமைத்து விண்ணில் ஏவுவது போன்ற உன்னத நோக்கங்களுடன் ஆராய்ச்சிகள் இஸ்ரோவில் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தியா பல துறைகளிலும் சிறப்பான நவீன தொழில் நுட்பங்களைப் பெற்று உலகளவில் தலை நிமிர்ந்து நிற்பதற்கு இஸ்ரோவின் பங்களிப்பு மிக மிக முக்கிய காரணமாகும்!
ஏவு வாகனம்! அல்லது ராக்கெட்! 
ஏவு வாகனம் வெற்றிடமான விண்வெளியில் செல்லும் திறன் கொண்டது. பல டன் எடை கொண்ட எரிபொருளையும், ஆக்சிஜனையும் செயற்கைக் கோளையும் சுமந்து செல்லும் வகையிலி வடிவமைத்து உருவாக்கப்படுகிறது. 
அந்த எரிபொருளையும் ஆக்சிஜனையும் சரியான முறையிலும், அளவிலும் சேர்க்கும்போது அவை எரிந்து அதிக வெப்பமான வாயு உருவாகும். இந்த வாயுவை மிகுந்த அழுத்தத்துடனும், வேகத்துடனும் வெளியேற்றுவதன் மூலம் ராக்கெட் முன்னே செல்கிறது. 
ஏவுவாகனம் மூன்று அல்லது நான்கு அடுக்குகளாக இருக்கும். இவை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு அதன் மேலே செயற்கைக்கோள் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு அடுக்கிலும் தனித்தனியாக என்ஜினும் எரிபொருளும் இருக்கும். 
முதலில் கீழே இருக்கும் அடுக்கில் உள்ள எரிபொருள் எரிந்து அந்த அடுக்கு கழற்றி விடப்படும். இதனால் ராக்கெட்டின் எடை குறையும். இவ்வாறு மற்ற அடுக்குகளும் கழற்றி விடப்பட்டு ராக்கெட் மேலே சென்று செயற்கைக்கோளை தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் நிலை நிறுத்தும்! முதலில் ராக்கெட் அதிக எடை மற்றும் புவிஈர்ப்பு விசை காரணமாக வேகம் குறைந்து இருக்கும். பின்னர் பல அடுக்குகள் கழற்றி விடப்படுவதால் எடை குறைந்து வேகம் அதிகரிக்கும்! 
ராக்கெட்டின் வேகம் தேவைக்கேற்ப மணிக்கு 10 ஆயிரம் கி.மீ. முதல் 40 ஆயிரம் கி.மீ. வரை இருக்கும்! இதன் வேகமும் செல்லும் திசையும் பூமியிலிருந்து ராக்கெட் கட்டுப்பாட்டு மையத்தினால் கணினி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. செயற்கைக் கோளை நிலைநிறுத்தியவுடன் ராக்கெட் செயலிழந்து பயனற்றதாகிவிடும்!
செயற்கைக்கோள் -  சில அடிப்படைத் தகவல்கள்!
கைப்பேசி இணைப்பு, தொலைக்காட்சி இணைப்பு, வானிலை ஆராய்ச்சி, கனிமவள ஆராய்ச்சி, தட்பவெப்பம், உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக செயற்கைக்கோள்கள் உருவாக்கப்படுகின்றன. இவை பூமியை தீர்மானிக்கப்பட்ட வட்டப்பாதையில் பூமியை சீரான வேகத்தில் சுற்றும். இதற்கு எரிபொருளோ என்ஜினோ தேவையில்லை! 
"நிலவு' ஒரு இயற்கை கோள்! (NATURAL SATELLITE) அது எவ்வாறு பூமியைச் சுற்றுகிறதோ அவ்வாறு இவையும் சுற்றும்! ஆனால் சில செயற்கைக்கோள்களில் திசை மாற்றவும், சுற்றுப் பாதை மாற்றத்திற்காகவும் என்ஜின் பொருத்தப்படுவதுண்டு! 
அனுப்பப்படும் நோக்கத்திற்கு ஏற்ப செயற்கைக் கோளில் பல்வேறு உபகரணங்களும், கணினிகளும் கேமராக்களும் பொருத்தப்பட்டிருக்கும்! மேலும் மின்சார உற்பத்திக்காக சூரிய மின்தகடுகள் (SOLAR PANELS) மற்றும் மின்கலன்கள் வெப்ப தடுப்பு தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும்! 
தற்போது பூமியை ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் சுற்றுகின்றன. அதனால் தொடர்பு கொள்வதில் குழப்பம் வராமல் இருப்பதற்காக ஒவ்வொன்றுக்கும் ஓர் அடையாள எண்ணும், தனியாக மின்னலைக்கற்றைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 
பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் இவை இணைக்கப்பட்டிருக்கும். பூமியிலிருந்து கணினியின் மூலம் பல்வேறு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது. அதற்கேற்ப தன் நிலைப்பாட்டை மாற்றி செயல்படும் திறன் கொண்டவையாக செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்திற்குப் பின் இவை செயலிழந்துவிடும்! அப்பொழுதும் சுற்றிக்கொண்டுதான் இருக்கும். பின்னர் காலப்போக்கில் உடைந்து சிதறிப்போகும்! 
தொகுப்பு : கே.பார்வதி,
திருநெல்வேலி டவுன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com