அன்பு எனும் நதி அனைவரின் மனதிலும்
அடியினில் பிறந்திடல் தெளிவாகும்!
இன்பம் கனிவுடன் இரக்கமும் கருணையும்
இணைந்தலை புரண்டது வெளியாகும்!
பண்பு பணிவுடன் பாசமும் பரிவெனும்
பயிர்களுக் கதுஉரத் தழையாகும்!
உண்ண உணவுடன் உடுக்க உடையிலார்க்(கு)
உதவுதல் அதன் முதல் விழைவாகும்!
துன்பம் தனிலெவர் துடிப்பினும் தனதிமை
துடிப்பவை அதனிரு விழியாகும்!
தொண்டு உணர்வுடன் துடித்தெழுந் துடனதைத்
துடைப்பது அதனது வழியாகும்!
அன்பே உலகினில் அனைத்துள உயிர்களும்
அறிந்துடன் பழகிடும் மொழியாகும்!
அன்பே கலவரம் அடிதடிக் கிலி இருள்
அகற்றிடும் பகலவன் ஒளியாகும்!