எண்ணும், எழுத்தும் கற்பிப்போர்
இறவாப் புகழின் மாமனிதர்!
கண்ணும், கருத்துமாயிந்தக்
காசினிக்கே நலம் சேர்ப்பார்!
மண்ணில் மனித நேயமெனும்
மரத்தின் வித்தை விதைத்திடுவார்!
கண்ணின் மணிபோல் கல்வியினைக்
காத்துப் போற்றி வளர்த்திடுவார்!
நண்ணும் அறிவை நல்குதலில்
நாட்டில் இவர் போல் யாருண்டு?
விண்ணும் கூட வசமாகும்
வீழ்ந்தே இவர்தம் தாள் பணிந்தால்!
உண்ணும் உணவைத் தரும் உழவர்
உலகம் சுழல அச்சாணி!
எண்ணும் எழுத்தும் தரும் ஆசான்
என்றும் அறிவின் அச்சாணி!