மேற்குத் தொடர்ச்சி மலையோரம்
மிகவும் இயற்கை எழிலோடு
ஆற்றங் கரைக்கு அருகாக
அமைந்தது தளவாய் புரமாகும்!
கற்றோர் மிகவும் குறைவான
காட்டு ஓரத்துக் கிராமத்தில்
பெற்றோர் கூலி வேலைக்கே
பெரிதும் சென்று வருவார்கள்!
பள்ளிக் கல்வி பயிலாத
பரம ஏழைக் குடும்பத்தில்
பிள்ளைச் செல்வ மகளாகப்
பிறந்து வளர்ந்தாள் அலமேலு!
சுட்டிப் பெண்ணாள் குடிசைக்குள்
சும்மா இருக்கப் பிடிக்காமல்
குட்டி ஆடுகள் சிலவற்றைக்
கொண்டு மேய்த்துத் தினம்வந்தாள்!
ஆட்டை ஓட்டிக் காட்டுக்கு
அவளும் போகும் போதெல்லாம்
வீட்டு நாயும் தவறாமல்
விடாது கூடச் சென்றுவரும்!
ஒருநாள் சிறுத்தைப் புலியொன்று
உருமிக் கொண்டு திடுமென்று
அருகாய்ப் பாய்ந்து வரக்கண்டு
ஆடுகள் பறந்தன திசைக் கொன்று!
ஆட்டைத் தூக்க வந்தபுலி
அதனைத் துரத்த நாய்செல்ல
காட்டுப் புலிதன் வாயிலதைக்
கவ்விச் சென்றது வனத்துக்குள்!
உண்ட நன்றிக் கடன்தீர
உயிரை நாயும் ஈந்ததுபோல்
மண்ணில் நன்றி மறவாமல்
மனிதர் நாமும் வாழ்ந்திடுவோம்!