பச்சைப் புல்லின் நுனிமேலே
படிந்து கிடக்கும் பனித்துளியே
மெச்சும் உழவன் தலைப்பாகை
போல நீதான் தெரிகின்றாய்!
விரிந்த பரந்த காட்சியினை
சுருக்கிக் காட்டும் கண்ணாடி
அருகில் நிற்கும் பனைமரமும்
அடங்கி உன்னுள் கிடக்கிறதே!
சோலைச் செடியின் அரும்பைப்போல்
காலை வேளை பிறக்கின்றாய்
வேலை முடிந்த பூவைப்போல்
மாலை அழிந்து மறைகின்றாய்!
நீண்டு மறைந்த சூரியனும்
நாளும் கிழக்கே வருவதுபோல்
மீண்டும் காலை தோன்றுகிறாய்
பிறப்பு வட்டம் காட்டுகிறாய்!
பலரும் போற்றும் முத்துப்போல்
பெருமை அழகு தெரிகிறது
தொலைந்து விட்ட சில்லறைபோல்
உனது உருவம் மறைகிறது!