கொஞ்சு மழலையின் கொவ்வைக் கனியிதழ்க்
கொட்டுஞ் சிரிப்பினைப் பார்- அது
பிஞ்சு விரல்களால் நெய்யுடைச் சோற்றினைப்
பிசைந்து உதிர்ப்பதும் பார்!
தவழ்ந்தும் விழுந்தும் எழுந்தும் வருஞ்சிறு
தளிருடல் குழந்தையைப் பார்- நெஞ்சங்
கவர்ந்து நமையது மகிழ்ச்சியின் உச்சியில்
களிப்புறச் செய்வதும் பார்!
தத்தித் தளர்நடை யிட்டு வருகையில்
தவறி விழுவதும் பார்- அது
தொத்துங் கிளியென அன்னையின் தோள்களில்
தூங்கிக் கிடப்பதும் பார்!
"அம்மா" எனமிகு அன்புடன் தாயினை
அழைத்துச் சிணுங்குதல் பார்- அட
இம்மாநிலத்தினில் குழந்தைக்கு வேறோர்
ஈடுண்டு என்பவர் யார்?