அங்கிள் ஆன்டெனா: தலைகீழாக ஒரு மரம் வளர்கிறது என்கிறார்களே, அது உண்மையா?
கேள்வி: தலைகீழாக ஒரு மரம் வளர்கிறது என்கிறார்களே, அது உண்மையா?
பதில்: பார்ப்பதற்குத் தலைகீழாக வளர்ந்திருப்பது போலத் தெரியும், அவ்வளவுதான். ஆப்பிரிக்காவில் உள்ள "பாவோ பாப்' (போபோப் மரங்கள் என்றும் கூறுவர்) மரங்கள். நம்ம மதுரையில்கூட உள்ளன.
உலகளவில் அழிவின் விளிம்பில் உள்ள அரிதான மரம் இது.
பாவோபாப் மரங்களில் உள்ள 9 இனங்களில் 6 மடகாஸ்கர் தீவு, மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் அதிக அளவில் உள்ளன.
அடன்சோனியா என்ற அறிவியல் பெயர் கொண்ட பாவோபாப் விதைகளை நம் நாட்டிற்கு 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர், பிரிட்டிஷார் கொண்டு வந்தனர்.
மரத்தின் கீழ் பாகம் அகலமாகவும் கிளைகள் வேர்களைப் போல சிறிது சிறிதாக பல நெளிவுகளைக் கொண்டதாக இருக்கும்.
மரத்தின் பட்டைகள் பல ஆயிரம் லிலிட்டர் நீர் சேமிக்கும் தன்மை கொண்டவை. ஆப்பிரிக்க யானைகள் பட்டைகளைக் கரும்பு போல் தின்று தண்ணீர் குடிக்குமாம். இதன் காய்களில் இருந்து ஒருவித சர்பத் போன்ற பானம் செய்து குடிப்பார்கள்.மரத்தை வெட்டினால் நீர் ஊறிக்கொண்டே இருக்கும்.
அதிகபட்சம் 60 அடி உயரம், 4 மீட்டர் அகலம் வரை வளரும். அழகுக்காக வளர்க்கும் மரமாக இருந்தாலும் நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கி, காற்றை சுத்தமாக்குவதில் இது பெரும் பங்கு வகிக்கிறது.